சென்னை திருவேற்காடு அருகே காரில் சென்ற பிரபல திரைப்பட நடிகரை கத்தி முனையில் மிரட்டி 5 பேர் கொண்ட கும்பல் காரை கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் வசித்து வருகிறார் பிரபல கன்னட திரைப்பட நடிகர் ஜி.ஆர் என்கிற ராமச்சந்திரன். இவர் தமிழ் மற்றும் கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் ராமச்சந்திரன் தனது வீட்டில் இருந்து நேற்று இரவு காரில் வெளியே சென்றபோது, வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பல் முகவரி கேட்பது போல் காரை மறித்துள்ளனர். அப்போது அவரிடம் பேச்சுக்கொடுத்த அந்த கும்பல் சிறிது நேரத்தில் கத்தியை காட்டி மிரட்டியுள்ளது. இதில் பயந்த நடிகர் ஜி.ஆர் காரில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி ஓடினார். இதையடுத்து அந்த கும்பல் நிதானமாக காரை கடத்திச்சென்றது.
இதையடுத்து நடிகர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் அவரது ஓட்டுநர் சந்திரன் என்பவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments