arya

கலர்ஸ் என்ற தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா தொகுத்து வழங்கும் " எங்க வீட்டு மாப்பிள்ளை " என்ற நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர், சினிமா தணிக்கை வாரிய தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஜானகியம்மாள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் "கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை " எங்க வீட்டு மாப்பிள்ளை " என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா, 18 இளம் பெண்களில் தனக்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி உள்ளது. இதற்காக அந்த பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது பெண்களின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது. அதோடு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா தேர்வு, நீக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் சமத்துவம் மீறப்பட்டுள்ளது. பெண்களை காட்சிப்பொருளாக இந்த நிகழ்வில் காண்பிக்கின்றனர். பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றி வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் தவறான கருத்தை புகுத்தும் வகையில் உள்ளது. இவை தொடர அனுமதித்தால், இவை போன்ற நிகழ்ச்சிகள் பல வர வாய்ப்பாக அமையும்.

ஆகவே, பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தும், கலர்ஸ் தமிழ் சேனலின் தலைமை செயல் அலுவலர், நடிகர் ஆர்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் சங்கீதா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

Advertisment

இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன்,நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது "இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர், சினிமா தணிக்கை வாரிய தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.