Skip to main content

“முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”- அறிக்கை வெளியிட்ட அமைச்சர்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

"Action will be taken to protect important water resources" - Minister who issued the report

 

காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குழுக்களின் செயல்கள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்று நீர் மாசடைவதாக மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் நீர் தொழில்நுட்ப பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றின் நிதி உதவியுடன், சென்னை ஐ.ஐ.டி குழு நடத்திய ஆய்வில் தெரியவருகிறது.

 

இதற்கிடையில் ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் இயங்கிவரும் சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள் அடங்கிய 5 குழுக்கள் 06.10.2021 அன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுக்கள், மேற்கூறிய பகுதிகளில் இயங்கும் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அவைகளிலிருந்து கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை கண்டறிந்து வருகின்றன.

 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள், காவிரி ஆற்றில் சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழு கூறியுள்ள மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள பல்வேறு இடங்களில் 09.10.2021 அன்று நீர் மாதிரிகள் சேகரிப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் கலக்கும் உயர் உலோகங்கள், பூச்சிக்கொல்லி, மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றால் காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழு மற்றும் பல்வேறு வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  மேற்கூறிய குழுக்களின் ஆய்வறிக்கையின்படி காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.