Skip to main content

“மருந்து மாத்திரைகளை வெளியே வாங்க சொன்னால் நடவடிக்கை” - அமைச்சர் மா. சுப்ரமணியன்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Action taken it is recommended to buy medicine outside the Govt Hospital

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வுக்கூடம் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று ரூ.18 கோடி செலவில் அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியும், 3 சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்களும், 8 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மருத்துவத்துறை வரலாற்றில் முதன் முறையாக 29 புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்படுவது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 18 கோடி செலவில் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு ரூ. 12 கோடிக்கு கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு அரசு மருத்துவத்துறை சார்பில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இம்மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தருவதில்லை. வெளியே சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்ற புகார் வந்துள்ளது. இது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. அங்கு இதுபோன்ற புகார் இல்லை. அனைத்து வசதியும் உள்ள இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் செய்ய வெளியே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று எடுத்து வர சொல்லும் அவல நிலை உள்ளது. அரசு சார்பில் அரசாணை வெளியிட வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் கேட்டுள்ளார். அந்த அரசாணையை வெளியிட முழு முயற்சி எடுத்து வருகிறோம். தமிழ்நாடு முதல்வர் மனித வள ஈர்ப்பு என்ற அந்த அரசாணையை வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த அரசாணை வெளியில் வந்தவுடன் இதுபோன்ற தவறுகள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை விட்டுவிடமாட்டோம். யார் தவறு செய்தாலும் கல்லூரி முதல்வர் அவர்களுடைய பெயர்களை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மருத்துவர்கள், ஊழியர்கள் மனசாட்சியோடு பணியாற்ற வேண்டும். இந்த மருத்துவமனையில் கண்காணிப்பு வளையத்தை ஏற்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “இந்த கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. இம்மருத்துவமனையில் வெளியே சென்று மருந்து வாங்கி வர சொல்லி சீட்டு எழுதி கொடுப்பவர்கள் மீது கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடிய விரைவில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விடிவுகாலம் வந்து விடும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இம்மருத்துவமனை குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணம் உள்ளது. எனவே இது சிறந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அமைய அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்றார்.

விழாவில் முன்னதாக கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சி. திருப்பதி வரவேற்றுப் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ. ஐயப்பன் (கடலூர்). ம. சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோயில்), அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் கே. பழனி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். முடிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் கே.எஸ். ஜூனியர் சுந்தரேஷ் நன்றி கூறினார்.

விழாவில் உதவி ஆட்சியர் ராஷ்மி ராணி, ஏஎஸ்பி பி. ரகுபதி, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பாலாஜி சுவாமிநாதன், டாக்டர் பாரி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த. ஜேம்ஸ் விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்பு சந்திரசேகர், ஏ.ஆர்.சி. மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Removal of 5 kg sphincter tumor from female stomach; Achievement of Government Medical College Doctors

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பணம் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பைக் கட்டியை  அகற்றி உள்ளார்கள். இதைத் தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.