Skip to main content

‘இன்ஸ்பெக்டர்னா பெரிய இதுவா?’ -  பெண் ஆய்வாளரிடம் அநாகரிகமாகப் பேசிய காவலர் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
Action taken against the policeman who spoke rudely to the female inspector

இந்தியாவில் திருத்தப்பட்ட மூன்று முக்கிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வர உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று (20-05-24) வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காட்பாடி காவல் நிலைய தலைமை காவலர் கோபி, மது அருந்திவிட்டு மது போதையில் வகுப்பில் கலந்து கொண்டுள்ளார். போதையில் வகுப்பில் அமர்ந்தபடி வகுப்பை கவனிக்காமல் தள்ளாடி, உளறிக்கொண்டு இருந்துள்ளார். இது தொடர்பாக பெண் காவல் ஆய்வாளர் பாரதி எச்சரித்துள்ளார். 

அதற்குத் தலைமைக் காவலர் கோபி, ‘நான் ஒழுங்கா பாடத்தை கவனிச்சிட்டு தான் இருக்கேன், நீ நடத்து’ என ஒருமையில் முதலில் பேசி உள்ளார். பாடம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு முறையாகப் பதில் அளிக்காமல் அநாகரிகமாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர், ‘நீ இன்ஸ்பெக்டர்னா பெரிய இதுவா, நீ கேள்வி கேட்டால் நான் பதில் சொல்லனுமா, ஒழுங்கா பேசு’ என அனைவர் முன்னிலையில் தொடர்ந்து அநாகரிகமாகப் பேசி உள்ளார்.

இது தொடர்பான புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்குச் சென்றது. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையில், அவர் பேசியது உண்மை எனத் தெரிய வந்தது. மதுபோதையில் பணியில் இருந்ததோடு மட்டுமல்லாமல், உயர் அதிகாரியை மிக மோசமாகப் பேசியதால் தலைமைக் காவலர் கோபியைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டத்தைக் காக்க வேண்டிய காவல் துறையைச் சார்ந்தவர்களே மது போதையில் பணிக்கு வந்திருப்பதும், குற்ற வழக்குகள் சம்பந்தமான பாடம் கற்பிக்கும் இடத்திலேயே மது போதையில் வந்திருப்பது காவல்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்