Skip to main content

தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை தேவை! ராமதாஸ்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
boat




சிங்களப் படை பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் இணைந்து பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிங்களப் படையினரின் இத்தகைய அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.

 

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை இலங்கைக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் சுற்றி வளைத்து  பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அச்சமடைந்த தமிழக மீனவர்கள் உயிர் பிழைக்கும் நோக்கத்துடன் உடனடியாக அங்கிருந்து தப்பித்து கரைக்கு திரும்பினார்கள்.

 

வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இத்தகையத் தாக்குதல் நடத்தப் படுவதும், தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்வதும் புதிதாக நடப்பவையல்ல. காலம் காலமாக இந்த அத்துமீறலும், கொடுமையும் தொடரும் போதிலும், அதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கும் விஷயமாகும்.

 

 Ramadoss

அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இந்தியக் கடல் எல்லையில் நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய மீனவர்கள் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, இந்திய இறையாண்மை மீதே நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதற்கு இந்திய அரசின் பதில் என்ன? என்பது தான் தமிழக மீனவர்கள் அறிய விரும்பும் செய்தியாகும்.

 

தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்கள அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை  திருப்பித் தர இலங்கை அரசு மறுத்து வருகிறது. அதன்பின் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், கண்டிப்பாக 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.1.50 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அச்சட்டத்தின்படி தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அரசின் இந்த அத்துமீறல்கள் எதையும் இந்தியா கண்டிக்காதது தான் இலங்கைக்கு அதீத துணிச்சலை தந்துள்ளது.

 

இலங்கைப் படையினரின் அத்துமீறல்கள் இதேபோல் தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும். இலங்கையின் அத்துமீறலுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.  கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.