பழனி மலைக்கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில், மீறி செல்போன் கொண்டு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்க கோவில் நிர்வாகம் அதிரடி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் பிரசித்தி பெற்ற ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை அரியவகை நவபாஷாணத்தில் போகரால் உருவாக்கப்பட்டது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கபட்டு இருந்தாலும் மூலவருக்கு தினசரி ஆறு கால பூஜைகள் நடை பெறுகின்றன. தற்போது மலைக்கோவிலில் செல்போன் மற்றும் கேமராக்கள் மூலம் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனினும் ஆர்வமிகுதியால் முருக பக்தர்கள் சிலர் மூலவரை செல்போன் மூலம் படம்பிடித்து வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் ஆகிய சமூக வலைதளங்களில் விடுகின்றனர். இது ஆகம விதிகளுக்கு முரணாகவும், பாதுகாப்பு காரணங்களை மீறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோயிலுக்கு செல்போன் கொண்டு வருவதை தடுக்க அதற்கு கட்டணம் விதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன்படி அடிவாரம் மற்றும் மலைக்கோவில் கட்டண அடிப்படையில் பக்தர்கள் கொண்டுவரும் செல்போன்கள் வாங்கிக்கொண்டு டோக்கன் வழங்கப்படும் முறையை நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிவாரம் கீழே ஒரு கட்டணமும், மலை மீது மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் நாளடைவில் கோவிலுக்கு பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதுகூட தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் செல்போன் கொண்டு வரும் முருக பக்தர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கொண்டு வர கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டம் கரோனா ஊரடங்கு முடிந்தபின் நடை முறைப்படுத்தப்படும் என தெரிகிறது.