கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துக் கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ப.ரவீந்திரநாத் எம்.பி., வி.ப.ஜெயபிரதீப் உள்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.விலிருந்து ரவீந்திரநாத் எம்.பி.யை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. கட்சி சட்ட விதிகளின் படி எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது. அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, உதயகுமார், ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஆதிராஜாராம், ஜக்கையன், ராஜன் செல்லப்பா, தி.நகர் சத்தியா, விருகை ரவி, அசோக் கந்தன், இளங்கோவன் ஆகிய 22 பேர் நீக்கப்பட்டுள்ளனர்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம், "உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான்; எங்களை அவர்கள் நீக்கியது செல்லாது" எனத் தெரிவித்துள்ளார்.