Skip to main content

ஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்காக நடவடிக்கையா? – பணி நீக்கத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

Highcourt chennai

 

ஆண் காவலரும் பெண் காவலரும் ஒரே வீட்டில் இருந்தார்கள் என்ற காரணத்திற்காக, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்து, காவலரின் பணி நீக்கத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த சரவணபாபு என்பவர், காவல்துறை ஒதுக்கீடு செய்த குடியிருப்பில் பணி வரைமுறைகளை மீறி, சக பெண் காவலருடன் தவறான கண்ணோட்டத்தோடு இருந்ததாக, ஆயுதப்பிரிவு ஐ.ஜி அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 

இதனை எதிர்த்து சரவணபாபு தாக்கல் செய்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். சரவணபாபு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘தோழியைப் பார்க்க வந்த பெண் காவலர், அவர் இல்லாததால், பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டுச் சென்றாரா எனக் கேட்கவே சரவணபாபு வீட்டிற்குள் வந்துள்ளார். அந்த நேரத்தில், யாரோ வெளியில் கதவைச் சாத்திவிட்ட நிலையில், அதிகாரிகள் வந்தபோது, மனுதாரர் நடந்ததைக் கூறியும், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என வாதிட்டார்.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘மனுதாரர் சமர்ப்பிக்கும் கருத்தையே காவல்துறையின் சாட்சிகளும் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் காவலரும், காவலர் சரவணபாபுவும் தவறான நோக்கோடுதான் வீட்டிற்குள் இருந்தார்கள் என்பதற்கு எந்த சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லை. ஆண் காவலரும், பெண் காவலரும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரே வீட்டில் இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் தவறான நோக்கம் கொண்டிருந்தார்கள் என்ற கற்பிதங்களை ஏற்க முடியாது’ எனத் தெரிவித்த நீதிபதி, சரவணபாபுவை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ததோடு, பணிபலன்கள் பெற அவர் தகுதியானவர் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.