தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி அடங்கிய அமர்வு, கரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்துக் குடிநீர் ஆலைகளும் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என இடைக்கால உத்தரவிட்டனர். மேலும் இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசுக்கு வழங்க வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் அளித்த விண்ணப்பங்கள் மீது எடுத்த முடிவுகளை அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். அதில், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்க முடியாத பகுதிகளில் இருந்து (Over exploited and critical) பெறப்பட்ட 396 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மீண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது. அதேசமயம், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்ககூடிய (Safe and Semi critical) பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 690 நிறுவனங்களில் 510 நிறுவனங்கள் செயல்பட, தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் 15 சதவீதத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியுள்ளன. மீதமுள்ள 367 நிறுவங்கள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை. என, நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை, மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியதில்லை. உடனடியாக மூட உத்தரவிடலாம். நிலத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளைவைக் கணக்கிடும் Flow meter எனும் கருவியை பொருத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்க, அரசு ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை என அரசுக்கு கேள்வி எழுப்பினர். மனுதாரர் சிவமுத்து தரப்பில், சென்னையில் மட்டும் விதிகளை மீறி அளவுக்கு மீறி அதிகளவில் தண்ணீர் எடுத்து வரும் 40 நிறுவனங்களின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இதே போன்று தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமலும் இயங்கி வந்த தண்ணீர் நிறுவனங்களுக்கு, கடந்த மார்ச் மாதம் வழங்கிய சலுகையை திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்த நீதிபதிகள், நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைக் கணக்கிடும் கருவிகளைப் பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நவம்பர் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.