Skip to main content

பிரபல ரவுடி 5வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

சேலத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடி, ஐந்தாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

accused murali arrested goondas act


சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளி வியாபாரம் செய்துவந்த வியாபாரி ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி 229 கிலோ வெள்ளி நகைகளுடன் காரில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். 
 


கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே காரை வழிமறித்த மர்ம கும்பல், அவரிடம் இருந்த வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி ஓடியது. இதுகுறித்து ஹிரியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 


விசாரணையில், சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன் முரளி என்கிற முரளிதரன் (37) மற்றும் அவருடைய கூட்டாளிகள்தான் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது.



இதையடுத்து முரளியை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், 20.11.2017ம் தேதி, சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் அருகே ஒரு கும்பல் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது. சிறைக்குள் இருந்தபடியே முரளி போட்டுக்கொடுத்த திட்டத்தின்பேரில் அவருடைய கூட்டாளிகள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் முரளி மீது ஒரு வழக்கை பதிவு செய்தனர்.



இந்நிலையில் முரளி, பிணையில் வெளியே வந்தார். கடந்த 16.2.2019ம் தேதி, அல்லிக்குட்டை காலனி சுடுகாடு அருகே நடந்து வந்த ஒரு மூதாட்டியிடம் கத்தி முனையில் 3 பவுன் நகை பறிப்பிலும் ஈடுபட்டார். 
 


மேலும் முரளி மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி என பல்வேறு வழக்குகள் உள்ளதோடு, பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
 


இதற்கிடையே, வழிப்பறி வழக்கில் அவரை கைது செய்த காவல்துறையினர் கோவை சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர், மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் பரிந்துரை செய்தனர். 
 


அதன்பேரில், மாநகர காவல்துறை ஆணையர் சங்கர், ரவுடி முரளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணையை, கோவை சிறையில் உள்ள முரளியிடம் காவல்துறையினர் புதன்கிழமை (ஏப்ரல் 10) சார்வு செய்தனர். இத்துடன் முரளி, ஐந்தாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருட்டு, வழிப்பறி; ரவுடிகள் மூவர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Gundas swooped on three in salem

 

சேலத்தில் திருட்டு, வழிப்பறி, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரைக் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தனுஷ் (21). அம்மாபேட்டை வித்யா நகர் 8 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த மாது மகன் விக்ரம் (20). தாதகாப்பட்டி மூணாங்கரட்டைச் சேர்ந்த சம்பத் மகன் மணிமாறன் (32). இவர்கள் மூன்று பேரையும் சேலம் மாநகர காவல்துறையினர் ஜூலை 28ம் தேதி ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

இவர்களில் விக்ரம், தனுஷ் ஆகியோர் மீது இருசக்கர வாகனத் திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தல் ஆகிய வழக்குகள் உள்ளன. இவர்களில் தனுஷ் மீது முதல் முறையாகவும், விக்ரம் மீது இரண்டாவது முறையாகவும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மற்றொரு ரவுடியான மணிமாறன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை தாதகாப்பட்டி பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார். இவர் விற்ற லாட்டரி சீட்டுக்குப் பணம் விழாதபோது அவரிடம் சீட்டு வாங்கிய நபர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அவர்களைக் கத்தி முனையில் மிரட்டியுள்ளார். 

 

இதுகுறித்த புகாரின் பேரில் அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருந்தன. இதையடுத்து, பொது அமைதியைக் கருதி இவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இவர் மீது மூன்றாவது முறையாகக் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

கொலை, பாலியல், ஆள் கடத்தல் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Goondass on five people in salem

 

சேலத்தில், கொலை, ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 5 நபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் உதயசங்கர். இவருக்கும் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் பன்னீர்செல்வம் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட பன்னீர்செல்வம், கடந்த மே மாதம் 15 ஆம் தேதி, தனது கூட்டாளிகளான சேலம் மூன்று சாலை ஜெயா நகரைச் சேர்ந்த ஆனந்த் (26), சேலம் கல்லாங்குத்து கோவிந்தன் தெருவைச் சேர்ந்த கணேஷ் முத்துராஜ் மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார் (23), பள்ளப்பட்டி சின்னேரி வயல்காட்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (28) ஆகியோரை துணைக்கு அழைத்துக் கொண்டார். 

 

அப்போது அவர்கள் உதயசங்கரை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பள்ளப்பட்டி அருகே உள்ள ஹட்சன் பால் சொசைட்டி அருகில் சமாதானம் பேச வருமாறு அழைத்தனர். அங்கு வந்த உதயசங்கரை அவர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரித்த பள்ளப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கொலையாளிகள் நால்வரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். 

 

இவர்களில் பன்னீர்செல்வத்தின் மீது ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு கைதி வழிக்காவலுக்குச் சென்றபோது காவல்துறை வாகனத்தை மறித்ததாகவும், 2022 ஆம் ஆண்டு ஆள்கடத்தலில் ஈடுபட்டதாகவும் ஓமலூர், ஆத்தூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, சேலத்தை அடுத்த சிவதாபுரம் அங்காளம்மன் கோயில் அருகில் வசிக்கும் மாதேஸ்வரன் மகன் மணிகண்டன் (25) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

 

பன்னீர்செல்வம், ஆனந்த், விக்கி என்கிற விக்னேஷ்குமார், சந்தோஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து கொடுங் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் லாவண்யா, கவுதம் கோயல் ஆகியோர் காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தனர். 

 

அதை ஏற்றுக்கொண்ட ஆணையர் விஜயகுமாரி, அவர்கள் ஐவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஒரே நாளில் 5 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த சம்பவம், சேலத்தில் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.