
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்த கானா முருகன் என்பவர், கானா பாடல்களை பாடி வருகிறார். இவர் மீது மதுபானம் விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கானா முருகன் தொடர்பான சில வழக்குகளில் ஆஜராகி கண்ணதாசன் வாதாடி இருக்கிறார். இருப்பினும் கானா முருகன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியான நிலையில் அவரது வழக்கில் வாதாட கண்ணதாசன் மறுத்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று கானா முருகன், நியு டவுன் பகுதியில் உள்ள வழக்கறிஞர் கண்ணதாசனின் அலுவலகத்திற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கானா முருகன் தான் வைத்திருந்த அரிவாளால், வழக்கறிஞர் கண்ணதாசனின் கை மற்றும் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெட்டிவிட்டு, கண்ணதாசனின் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், வழக்கறிஞர் கண்ணதாசனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கானா முருகனை வாணியம்பாடி டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் விண்ணமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கானா முருகனை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரைச் சரித்திர பதிவேடு குற்றவாளி அரிவாளால் வெட்டி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் தான் காரணமா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.