Skip to main content

58 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கூட்டுறவு சங்க கணக்காளர் கைது!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Accountant of cooperative society arrested in 58 crore rupees fraud case!

 

சேலத்தில் 58 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அமுதசுரபி கூட்டுறவு சங்க கணக்காளரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டினம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர், தன் உறவினர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலத்தில் அமுதசுரபி கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், கூட்டுறவு சங்க விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் இதன் கிளைகளைத் தொடங்கி நடத்தி வந்தனர்.

 

இந்த சங்கத்தில் குறுகிய கால முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை சங்க நிர்வாகிகள் வெளியிட்டனர். இதை நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள், இந்த சங்கத்தில் முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையைத் தராமல் சங்கத்தினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். தான் 2.92 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்ததாகவும், அந்தப் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

 

இதுகுறித்து ஆய்வாளர் சித்ரா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். முதல்கட்ட விசாரணையில், 1000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று சுமார் 58 கோடி ரூபாய்க்கு மேல் அமுதசுரபி கூட்டுறவு கடன் சங்கம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தின் தலைமையிடம் மற்றும் அனைத்து கிளைகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த ஜெயவேலை கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்களைத் தேடி வந்தனர்.

 

இந்நிலையில், அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த எடப்பாடி அருகே உள்ள எரப்பட்டிரெட்டியூரைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவரை காவல்துறையினர் இரு நாள்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒரு அலைப்பேசி கைப்பற்றப்பட்டுள்ளது. அவரை, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த மோசடி தொடர்பாக தங்கபழம், சரண்யா, பிரேம் ஆனந்த் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.