Accident near Madurai toll plaza

Advertisment

மதுரை மாவட்டம் வண்டியூருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலைப் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்தப் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகமான வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக வந்துகொண்டிருந்தது. இத்தகைய சூழலில், ஆந்திர மாநிலப் பதிவு எண்ணைக் கொண்ட கனரக லாரி ஒன்று வண்டியூர் சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தது. அந்த லாரியின் ஓட்டுநராக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அங்கிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அந்த லாரி பயங்கர வேகத்துடன் சுங்கச்சாவடிக்கு அருகே வந்துள்ளது. ஒரு கட்டத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பணம் வசூல் செய்யும் மையத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அந்த நேரத்தில், சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தார். மேலும், ராங் ரூட்டில் லாரி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ் அங்கிருந்த ஓட முயன்றபோது துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமின்றி, ராங் ரூட்டில் வந்த லாரி எதிரே இருந்த ஒரு மாருதி வேனையும் அடித்து தூக்கியது.

மேலும், அங்கிருந்த ஊழியர்களும் வாகன ஓட்டிகளும் அலறியடித்து ஓட்டம் பிடித்த நேரத்தில், அந்த மாருதி வேன் சுமார் 20 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, லாரி அடித்த வேகத்தில் அந்த வேன் பயங்கரமாக நசுங்கியது. இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் படுகாயம் அடைந்து வலியால் கதறிக்கொண்டிருந்தனர். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் என்ன செய்வது எனத்தெரியாமல் திகைத்துப் போனார்கள். மேலும், உடனடியாக ஓடிச் சென்று மாருதி வேனில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முயன்றபோது, அவர்களுடைய கை கால்கள் வாகனத்தில் சிக்கியிருந்தது.

Advertisment

இதையடுத்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு வேனுக்குள் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொடூர விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து, உயிரிழந்த சதீஷ்குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுங்கச்சாவடி அருகே வந்தபோது லாரியில் பிரேக் பிடிக்காமல் இருந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில், அங்கிருந்த சக பணியாளர்கள் விபத்தில் சிக்கிய சதீஷின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். மேலும், சதீஷின் மனைவி தற்போது நிறைமாத கா்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், பரபரப்பான வண்டியூர் சுங்கச் சாவடியில் நடந்த இந்த பயங்கர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.