தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று மகிழ்ச்சி வீதி எனும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அதிகளவிலான மக்கள் கூடியதாலும், சிறு விபத்து ஏற்பட்டதின் காரணமாகவும் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மதுரை அண்ணா நகர் பகுதியில் இன்று 'Wom Madurai' என்ற தலைப்பில் மகிழ்ச்சி வீதி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி வாங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் சூரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனால், அங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் கூடியது. 20,000க்கும் மேற்பட்டோர் வருகை தந்ததால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதேபோல், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் கூட்ட நெரிசலின் காரணமாக சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலருக்கு சிறு சிறு காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மதுரையில் நடைபெற்றுவந்த மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தடுப்புகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.