கோவை போத்தனூர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி பத்மா இவர் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் செல்வதற்காக அழகர்சாமி பத்மாவும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது செட்டிபாளையம் பிரிவில் வேகத்தடையை ஏறி இறங்கும்போது பின்னால் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் முன்புறம் மோதியதில் நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி பத்மா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். அவரது கணவர் அழகர்சாமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
வேகத்தடை வழக்கத்திற்கு மாறாக அதிக உயரத்தில் போடப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ஏற்கனவே வேகத்தடையில் உயரத்தை குறைக்க வலியுறுத்தி பல முறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுக் கொள்ளவில்லை எனவும், அடுத்த விபத்து ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் இந்த வேகத்தடையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
விபத்து குறித்து போத்தனூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி ஓட்டுனர் பத்திரன் என்பவரை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.