Skip to main content

“மாயமான மணமகள்; திரும்ப கிடைத்ததும் குடும்பத்தினர் கலக்கம்"!

Published on 24/08/2021 | Edited on 25/08/2021
"I do not want to, so I called my boyfriend and went to Chennai" - the woman who confessed to the police

 

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் நாகையன் என்கின்ற நாகராஜன். இவரது மகள் 19 வயதுடைய சத்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அவருடைய தாய்மாமாவுக்கும் கடந்த 20 ஆம் தேதி பள்ளிக்கொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் கிராமத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக கடந்த 19 ஆம் தேதி அதிகாலை 10 பவுன் நகையுடன் சத்யா மாயமாகி்விட்டார்.

 

இதனால் அதிர்ச்சியான பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லையென பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் நாகராஜன் புகார் கொடுத்தார். வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விசாரணை நடத்திய போலீஸார், ‘பெண்ணுக்கு கல்யாணத்தில் விருப்பம் இருந்திருக்காது, யாரையோ காதலிச்சிருக்கும், அவனோட காணாமபோயிருக்கு, அதுவா வரும் அப்போ விசாரிச்சிக்கலாம் போ’ என கிடப்பில் போட்டுவைத்துள்ளனர். மாயமான சத்யா ஆகஸ்ட்  23ஆம் தேதி ஒரு இளைஞனுடன் காவல்நிலையத்துக்கு வந்துள்ளார். சத்யா கழுத்தில் புதுத்தாலி தொங்கிக்கொண்டு இருந்துள்ளது.

 

அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, “நான் விரிஞ்சிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை காதலித்து வந்தேன். எங்கள் காதலை தெரிந்துக்கொண்டு அவசரம் அவசரமாக என் விருப்பத்தை மீறி ராணுவ வீரரான எனது தாய்மாமாவுக்கு கடந்த 20 ஆம் தேதி திருமணம் செய்ய இருந்தனர். இதனால் அதிகாலை 3 மணிக்கு எனது காதலன் தினேஷ்குமாரை வரவழைத்து அவருடன் சென்னைக்கு சென்றோம்.

 

அங்கு எங்களது நண்பர்கள் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்” என்று சத்யா கூறி உள்ளார். இருவரின் பெற்றோரையும் வரவழைத்து சமாதானம் செய்து, திருமண ஜோடிகளுக்கு தொந்தரவு யாரும் தரக்கூடாது என எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.