Skip to main content

ஒரே நேரத்தில் பற்றி எரிந்த 6 குடிசை வீடுகள்; அலறித்துடித்த கிராம மக்கள்!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
About 6 cottages burned at the same time; Screaming villagers

உளுந்தூர்பேட்டை அருகே மின்கசிவு காரணமாக 6 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது இலுப்பையூர் கிராமம். இங்கு வசித்து வருபவர் காத்தவராயன். இவருடைய குடிசை வீடு இன்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. என்ன காரணம் எனத் தெரியாமல் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தீயை அணைக்க போராடினர். தொடர்ந்து  தீ காற்றில் பரவியதால் காத்தவராயன் வீட்டுக்கு அருகில் இருந்த முத்துக்குமார், ஆனந்தபாபு, உத்திரகுமார், முல்லைவனம், சுரேஷ் ஆகிய ஆறு பேரின் கூரை வீடுகளும் எரிந்தது.

தொடர்ச்சியாக ஆறு வீடுகள் குடிசை வீடுகள் எரிந்ததால் வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். உடனடியாக உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் சென்ற நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வீடுகளில் இருந்த அத்தனை உடைமைகளும் எரிந்து முழுவதுமாக நாசமடைந்தது. குடிசை வீடு எரிந்ததை தாங்க முடியாமல் வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்