ஆவின் டெண்டர் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை! 

aavin milk tanker lorry tender chennai high court order

பால் லாரி டெண்டரில் பங்கேற்க தகுதியிழப்பு செய்யப்பட்ட நிறுவனம் தொடர்ந்த வழக்கில், டெண்டர் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்து,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் பாலை எடுத்துச் செல்வதற்காக, 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 303 டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டு, 2020- ஆம் ஆண்டு ஜூலை மாதம், 288 லாரிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது.அந்த டெண்டரில், தொழில்நுட்ப தகுதிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு,அதில் சில நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் தேர்வான நிலையில், வணிக தகுதிக்கான விண்ணப்பங்களைத் திறப்பது தாமதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, தொழில்நுட்ப தகுதியில் வெற்றிபெற்ற நவீதா டிரான்ஸ்போர்ட் நிறுவனம், ஆவின் நிர்வாகத்திற்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்குவதற்காக தாமதப்படுத்தப்படுகிறதா என சந்தேகம் எழுப்பி, பால்வளத்துறை செயலாளருக்கு ரகசியக் கடிதம் அனுப்பியது. அதன் பின்னரும் அழைக்கப்படாத நிலையில், வணிக ரீதியிலான டெண்டர் திறக்கப்பட்ட நிலையில், நவீதா டிரான்ஸ்போர்ட் அழைக்கப்படாமல்,தகுதியிழப்பு செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு பல முறை விளக்கம் அளித்தும், தகுதியிழப்பை திரும்பப்பெறாததால், நவீதா டிரான்ஸ்போர்ட் பங்குதாரரான லக்ஷ்மி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், தகுதியிழப்பு நடவடிக்கையை ரத்து செய்யவும், தங்கள் நிறுவனத்தைச் சேர்க்காமல் டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தகுதியிழப்பு உத்தரவு மற்றும் டெண்டர் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கு குறித்து தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் நான்குவாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

AAVIN MILK chennai high court
இதையும் படியுங்கள்
Subscribe