Aavin ghee price hike

ஆவின் பால்விலையைத்தொடர்ந்து ஆவின் நெய்யின் விலையும் அதிகரித்துள்ளது.

Advertisment

கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இது குறித்தான அறிவிப்பில், பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32-லிருந்து ரூபாய் 35-ஆகவும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41-லிருந்து ரூபாய் 44-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும். தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை (ஆரஞ்சு பாக்கெட்) லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60-ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டது.

தற்போது பாலின் விலையைத்தொடர்ந்து நெய்யின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ. 580-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 50 ரூபாய் உயர்ந்து ரூ.630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 500 மி.லி. இதற்கு முன் ரூ.290 ஆக விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி. ரூ.130 இல் இருந்து ரூ.145-க்கும் 100மிலி ரூ.70 இல் இருந்து ரூ75-க்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.