Skip to main content

திருச்சியில் ஆடி பாடும் ஆடி பெருக்கு திருவிழா!

Published on 03/08/2018 | Edited on 27/08/2018



தமிழகத்தில் கடந்த 6 வருடங்களாக காவிரியில் தண்ணீர் வரத்து ஏனோ தானே என்று இருந்தது. தற்போது காவிரி ஆணையம், உச்சநீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு இந்த வருடம் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்டதால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. அதனால் இந்த வருடம் ஆடி பெருக்கை மிகச்சிறப்பாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று காலை அம்மா மண்டபத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவதற்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு தேவைய உடனடி மருத்துவ சேவை என்று ஏகப்பட்ட முன் ஏற்பாடுகளுடன் களை கட்டி வருகிறது ஆடி 18 திருவிழா.

இன்றைய தினம் காலையிலே நீர் நிலைகளில் நீராடி, தான தர்மங்கள் செய்து, ஆடிப்பதினெட்டு காவேரி பூப் பெய்திய நாள் என்கிற ஐதீகம் இருப்பதால் இன்று வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை நதிக்கரையில் பூஜை செய்து பின் காவிரியில் விடுவிக்கிறார்கள்.

புதிதாக திருமணம் செய்தவர்கள் ‘தாலிப் பிரித்து போடுதல்’ என்று தங்கள் தாலியை வேறு கயிற்றில் அல்லது சங்கிலியில் மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் கொண்டாடி தீர்த்தனர்.
 

 

 

ஆடிப்பெருக்கன்று நீர் பெருகி வருவதும் அதே போல் தங்கள் இல்லற வாழ்வும் பெருக வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். இன்று மாலை பலவித சித்ரான்னங்கள் படைத்து உண்பதும் சிறுவர்கள் சப்பரம் கட்டி இழுப்பது கிராமப்புறங்களில் தண்ணீர் இருக்கும் பகுதியிலும் இன்று நடைபெறும்.

ஸ்ரீரங்கத்தில் காவிரி அன்னையை ரங்கநாதரின் உபய நாச்சியாராகக் நினைத்துக் கொண்டு அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இது பெருமாள் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசிர் வழங்குவார் என்கிற நம்பிக்கை.

காவிரிக்கு சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை நேரத்தில் காவிரிக்குப் புடவை, காதோலை, கருகமணி, தாலி, வெற்றிலை பாக்கு, பழம் முதலிய மங்கலப் பொருட்களை ஸ்ரீரங்கநாதர் அர்ப்பணிப்பார். இந்தப் புனிதக் காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள். இந்தக் காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

சார்ந்த செய்திகள்