Skip to main content

சைக்கிளில் வந்த தாய் வீட்டுப் பொங்கல் சீர்; 91 வயதிலும் மகளை மறக்காத தந்தை

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

91 year old woman carrying Pongal gift her daughter home bicycle

 

கடந்த சில வருடங்களாக தை திருநாளான பொங்கல் நேரத்தில் ஒரு வீடியோ சமூக வலைத்தளம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது மட்டுமின்றி ஒரு தந்தை மகள் பாசத்தை அழகாக காட்சிப்படுத்தி இருந்தது அந்த வீடியோ. அந்த வீடியோதான் தொடர்ந்து பல வருடங்களாகப் பொங்கல் நேரத்தில் அதிகம் பார்க்கவும் பகிரவும் செய்யும் வீடியோவாக உள்ளது.

 

அப்படி என்ன வீடியோ அது?

 

91 வயது தந்தை தன் மகளுக்குத் தனது சைக்கிளில் மஞ்சள் கொத்து, பச்சரிசி, வெல்லம் என பொங்கல் பொருட்களும் தலையில் கரும்புக்கட்டும் வைத்துக்கொண்டு செல்லும் வீடியோதான் அது. இந்த 2023ம் அதேபோல தான் தனது பாச மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்த ஆண்டில் வரும் முதல் தை திருநாளுக்கு பொங்கல் பானை, அடுப்பு, மஞ்சள், காய்கறி, கரும்பு என அத்தனை பொருட்களையும் வாகனங்களில் ஏற்றிச் சென்று தலைவரிசை கொடுத்து வருகின்றனர். இந்த நாள் புதுப்பெண்ணுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

 

அதேபோல தான் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 91 வயது விவசாயி செல்லத்துரை தனது மகள் சுந்தரம்பாளை 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்தார். பல வருடங்கள் குழந்தையில்லை என்ற ஏக்கமும் கவலையும் இருந்தது. 9 வருடங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தை பிறந்து அனைவரையும் சந்தோசப்படுத்தியது.

 

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தனது மகளுக்குப் பொங்கல் சீர் கொடுப்பதை மறப்பதில்லை தந்தை செல்லத்துரை. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகள் வீட்டுக்கு சைக்கிளில் பொங்கல் சீர் கொண்டு போன வீடியோதான் வைரலானது. அதேபோல இன்று சனிக்கிழமை தனது மகளுக்கு சீர் கொடுக்க அனைத்துப் பொருட்களையும் வாங்கி சைக்கிளில் கட்டி தொங்கவிட்டவர் ஒரு கட்டுக் கரும்பை தூக்கித் தனது தலையில் வைத்துக் கொண்டு அசால்ட்டாக 17 கி. மீ சென்று மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்து திரும்பியுள்ளார்.

 

இது பற்றி செல்லத்துரை நம்மிடம், “என் மகளைத் திருமணம் செஞ்சு கொடுத்து 12 வருசம் குழந்தை இல்லை. அதுக்கப்பறம் இரட்டை குழந்தை பிறந்தது. பொங்கல் வரப் போகுதுன்னாலே என் மகளும் பேரக்குழந்தைகளும் ரொம்ப ஆவலோட காத்திருப்பாங்க. வழக்கம் போல சைக்கிள்ல எல்லாத்தையும் வச்சு, தலையில கரும்பு கட்டையும் வச்சுக்கிட்டு போய் சைக்கிளை நிறுத்தும்போது அவங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நமக்கும் வருசம் முழுவதும் தோட்டத்தில் வேலை செஞ்சு கிடைக்கிற மகிழ்ச்சியைவிட இந்த ஒருநாள் சீர் கொடுக்க போய் வருவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். 91 வயதானாலும் உடம்பில் தெம்பிருக்கு சைக்கிள் ஓட்றேன்” என்றார்.

 

எத்தனை வசதிகள் இருந்தாலும் தாய் வீட்டு சீர் வரும்போது அத்தனை மகள்களும் மகிழ்ச்சியில் குழந்தைகளாக மாறித்தான் விடுகிறார்கள். தந்தை செல்லத்துரை கொண்டு வந்த சீரைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் கசிந்ததாம் மகள் சுந்தரம்பாளுக்கு...

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.