தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் இன்று (04.07.2025) வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ‘வ. கலைஅரசி மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வா. சம்பத் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ப. மகேஸ்வரி நில நிர்வாகம், நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரித்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அ. ஜான் லூயிஸ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சரவண வேல்ராஜ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் அரசு சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (மேலும் சா. விஜயராஜ் குமார் 31.07.2025 அன்று பணி ஓய்வு பெறுவதையடுத்து அரசுச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை ஆகப் பொறுப்பேற்பார்). த. மோகன் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சு. சிவராசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இராஜேந்திர ரத்னூ முழு கூடுதல் பொறுப்பில், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் (TNUIFSL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அ. கேத்தரின் சரண்யா தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.