Skip to main content

ஊரடங்கை பயன்படுத்தி சானிடைசர் கொண்டு போலி மதுபானம் தயாரித்தவர்கள் 9 பேர் கைது!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

9 arrested for making fake liquor with sanitizer using curfew

 

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் அரசு மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மது குடிக்க முடியாமல் மது அருந்துவோர் அல்லாடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி சிலர் சட்ட விரோதமாக போலி மதுபானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

 

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த அகரம் ஊராட்சி இராமநாதன் குப்பத்தில், கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி நீலகண்டன் மகன் உத்திராபதி (33) என்பவர், வீட்டில் போலியாக மதுபானங்களைத் தயாரிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து குள்ளஞ்சாவடி போலீஸார் அங்குச் சென்று, அந்த வீட்டில் அதிரடியாக சோதனையிட்டு,  போலியாக மதுபானங்களை தயாரித்துவந்த கும்பலை கைதுசெய்தனர்.

 

மேலும் போலீஸ் விசாரணையில், மருத்துவத்துறையில் பயன்படுத்தக் கூடியதும், கரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதுமான Alcohol Hand Sanitizer கொண்டு மதுபானங்களைத் தயாரித்ததும் தெரியவந்தது.

 

அதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மூலமாக ஆய்வுகளை மேற்கொண்டபோது, இவர்கள் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தியது Alcohol Hand Sanitizer என்பது உறுதிப்படுத்தபட்டது. மேலும், 400 லிட்டர் சேனிடைசர் கொண்டு நூற்றுக்கணக்கான பாட்டில்களில், பிரபல மதுபான கம்பெனிகளின் பெயரில் மதுபானம் தயாரித்ததும் கண்டுபிடிக்கபட்டது. 

 

அதையடுத்து, போலி மதுபானம் தயாரித்த கும்பல்களிடம் இருந்து, மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள், 2500 போலி மதுபாட்டில்கள், போலி ஸ்டிக்கர்கள், அட்டைப் பெட்டிகள், டாடா ஏஸ் வாகனம் உட்பட அனைத்தும் குள்ளஞ்சாவடி போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. மேலும், போலி மதுபானம் தயார்செய்த உத்திராபதி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வீடூரை சேர்ந்த வரதன் மகன் வடமலை (38), குள்ளஞ்சாவடி அருகிலுள்ள பெரியகோவிலான்குப்பம் முத்துக்கிருஷ்ணன் மகன் ராமலிங்கம் (65), தாதாகுப்பம் சரவணன் மகன் மணிகண்டன் (24), முத்தான் மகன் தண்டபாணி (32), இராமநாதன்குப்பம் கந்தப்பன் மகன் ரகுபதி (46), ராஜேஷ்குமார், புதுச்சேரி ஸ்ரீதர், முள்ளோடை அன்பு ஆகிய  9 நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

 

கரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மதுபானங்கள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டவர்கள் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட சம்பவம் குள்ளஞ்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.