Skip to main content

திருச்சியில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டுபிடிப்பு! 

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

8th century inscription  discovery in Trichy!

 

திருச்சி மாவட்டம், திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ‘இனாம்குளத்தூர்’ என்னும் மிகப்பழமையான ஊர். இவ்வூர் முன்பு, கிருட்டிண சமுத்திரம் என்றும், பின்னர் வெள்ளாங்குளத்தூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இனாம்தாரர்கள் வருகைக்குப் பின்னர் இவ்வூர் 'இனாம்குளத்தூர்' என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இவ்வூர் குளக்கரையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலுக்கு இடப்புறத்தில் 3.5 அடி உயரமும், 2 அடி அகலமும், 0.75 அடி கணமும் உடைய பலகைக் கல் ஒன்றில் வில்லியாரின் புடைப்புச் சிற்பமுடைய வீரக்கல் ஒன்று நிறுவப்பட்டுள்ளதை தொல்லியல் ஆய்வாளர் பாலா பாரதி கண்டுபிடித்துள்ளார்.

 

அதுபற்றி அவர் கூறியதாவது, “வாரி முடித்த கொண்டையும், காதணியும், கழுத்தணியும், முன்கரங்களில் கடகவளையும், பின் கரங்கள் கால்கள் ஆகியவற்றில் காப்பும், இடுப்பில் அரைப்பட்டிகையும், குறுவாளும் அணிந்து இடக்கரத்தில் வில்லையும், வலக்கரத்தில் அம்பையும், நாணையும் இணைத்துப் பிடித்து இழுத்து எதிரியை அம்பு எய்தி தாக்கும்படியாக இடக்காலை முன்பக்கமாக நீட்டியும், வலக்காலைப் பின்பக்கமாக நீட்டியவாறும் வில்லியாரின் வீரக் கோலத்தை இந்தப் புடைப்புச் சிற்பம் சுட்டிக்காட்டுகிறது.   

 

இந்த வில்லியாரின் உருவத்தை வில்லுக்காரன் என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இவ்வூரில் வாழ்ந்த ஒரு பிரிவினர் தற்போது தோகமலை வாழை ஆராய்ச்சி மையம் அருகிலுள்ள இனாம்புலியூருக்குப் புலம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று இக்கல்லை வழிபாடு செய்துவரும் செய்தி ஊர் மக்கள் வாயிலாக அறியமுடிகிறது. 

 

தமிழ் மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியம் - பொருளதிகாரம் - வெட்சித்திணை 1.5இல் வீரக்கல் என்னும் நடுகல் நடுவதைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. சங்ககால இலக்கிய நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் வீரக்கல் என்னும் நடுகல் நடுவதைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுப் பொறிப்புகள் ஏதும் இல்லாத இந்த வீரக்கல் என்னும் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள வில்லியாரின் உருவ அமைப்பின் அடிப்படையில் இக்கல் நிறுவப்பட்டக் காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதலாம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.