Skip to main content

தமிழ் வளர்ச்சித்துறைக்கு 88.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!   

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

88.26 crore allocated for Tamil Development Department!

 

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தாக்கலாகும் இ-பட்ஜெட்டை, கணினித் திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் துவங்கினார். ஆனால் சில நொடிகளிலேயே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

 

தொடர்ந்து நிதியமைச்சர் உரையில், ''6 மாதங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும். அரசின் நிதிநிலையைச் சீர்படுத்துவோம் என மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். ஒரே ஆண்டில் முடிக்க இயலாத அளவுக்குப் பணி மிகக்கடுமையாக உள்ளது. நிதிச் சிக்கலை சீர் செய்ய 2, 3 ஆண்டுகள்  தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். மாநில அரசின் நிதியைத் திசைதிருப்பும்  வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது.

 

2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுநிலங்களை முறையாகப் பயன்படுத்த 'அரசு நில மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும். எந்த விதமான பேரிடரையும் சந்திக்கும் நிலையில் மாநிலம் உள்ளதை உறுதி செய்வோம். தமிழ் வளர்ச்சித்துறைக்கு 88.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறைக்கு 29.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகியவை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

 

தமிழகக் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 14,137 பணியிடங்கள் உருவாக்கப்படும். தீயணைப்புத் துறைக்கு 405.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுதுள்ள 1985ஆம் ஆண்டு, 'தீயணைப்புச் சேவைகள்' சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். சாலை பாதுகாப்பிற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதியதாக 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க 6.25 கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 150 கோடியில் காசிமேடு துறைமுகம் மேம்படுத்தப்படும். நீதித்துறை நிர்வாகத்திற்காக 1,713.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நீதிமன்றங்களுக்கும் புதிய கட்டிடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும். உணவு மானியத்திற்கு 8,437.57 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் பெரும் சவால் எனவே 500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும். 200 குளங்களின் தரத்தை உயர்த்த 111.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கிராமப்புற ஏழைகளுக்கு 2021-2022 ஆம் ஆண்டில் 8,017,41 கோடி ரூபாய் செலவில் 2,89,877  கான்க்ரீட் வீடுகள் கட்டப்படும். 1.27கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங் கவழிவகை செய்யப்படும். 'நமக்கு நமே' திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்