Skip to main content

சோதனைச்சாவடியில் வைத்தே 85 தமிழர்களைக் கைது செய்து ஆந்திரக் காவல்துறை அட்டூழியம் - வேல்முருகன்

Published on 02/03/2018 | Edited on 02/03/2018



செம்மரம் வெட்ட வந்தார்கள் என சோதனைச்சாவடியில் வைத்தே 85 தமிழர்களைக் கைது செய்து அட்டூழியம். சட்டவிரோதம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான இத்தகைய குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்மையில்தான் 5 தமிழர்களை செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று சொல்லி அடித்தே கொன்று முட்டளவு தண்ணீரும் இல்லாத குட்டையில் தூக்கி வீசியிருந்தது ஆந்திர காவல்துறை. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே இப்போது 85 தமிழர்களைக் கைது செய்திருக்கிறது ஆந்திரக் காவல்துறை.

திருப்பதி – கடப்பா சாலையில் உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் வைத்தே 85 தமிழர்களையும் கைது செய்திருக்கிறது ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புக் காவல்துறை. சந்தேகத்துக்குரிய வகையில் வந்த லாரியை சோதனை செய்ததில், 85 பேர் இருந்ததாகவும், கூடவே சமையலுக்குத் தேவையான பொருட்களும் இருந்ததாகவும், அதனால் அவர்கள் செம்மரம் வெட்ட வந்தவர்களே என்றும் சொல்லி கைது செய்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட அவர்கள் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பல பேர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள். இவர்கள், தாங்கள் சமையல் வேலை மற்றும் கட்டட வேலைக்கு என்று சொல்லியே அழைத்துவரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களைக் கேட்டபோது, செம்மரம் வெட்டுதல் தொடர்பான பிரச்சனைகளைத் தாங்கள் நன்கு அறிவோம் என்பதால், அதற்காக இல்லாமல் வேறு வேலை என்பதாலேயே வந்தோம் என்றனர். ஆனால் ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நாளிலிருந்தே அது தனது இருப்பைக் காண்பிக்க இத்தகைய சட்டவிரோத மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

அன்று 20 தமிழர்கள் சுட்டுக்கொலை, அதன் பின் பல முறை நூற்றுக்கணக்கில் தமிழர்கள் கைது, அண்மையில் 5 தமிழர்கள் அடித்தே கொலை, இன்றோ 85 தமிழர்கள் கைது. அதோடு ஆந்திரச் சிறைகளிலும் 3,500க்கும் மேற்பட்ட தமிழர்கள். இவை எல்லாமே ஆந்திரக் காவல்துறையின் அடாவடித்தனம் மிதமிஞ்சிப் போய்விட்டதைத்தான் காட்டுகிறது.

இந்தப் பிரச்சனையை தமிழக அரசு முறையாக, சரியாக, சட்டப்படியாக அணுக வேண்டும். சட்டவிரோதம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான இத்தகைய குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.