சேலத்தில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட 83 வயது முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் கோட்டையைச் சேர்ந்தவர் ரங்கசாமி (83). வேளாண்மைத் துறையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் 11 வயது சிறுமி தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், தனது வீட்டில் வளர்த்து வரும் பூனை, குட்டி போட்டுள்ளதாகவும், அந்தக் குட்டியை சிறுமிக்குப் பிடித்துக் கொடுப்பதாகவும் கூறி சிறுமிக்கு ஆசை காட்டி அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
அந்தச் சிறுமியுடன் வந்த உறவுக்கார சிறுமி, வீட்டுக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தாள். அங்கே ரங்கசாமி, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவள், முதியவரை பிடித்து தள்ளிவிட்டு விட்டு சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள்.
இதுகுறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் பழனியம்மாள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தார்.