சேலத்தில், தடை செய்யப்பட்ட 821 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு 31,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோரின் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள தேநீர் கடைகள், உணவகங்கள், மளிகை கடைகள், சாலையோர கடைகளில் மாநகர நல அலுவலர் யோகானந், மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டலங்களிலும் 821 கிலோ பிளாஸ்டிக் பைகள், தேநீர் குவளைகள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு 31500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.