750 special buses in operation

முகூர்த்தநாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “வார இறுதி நாட்களான சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 17 மற்றும் 18), முகூர்த்த நாட்களான வெள்ளி (16.02.2024) மற்றும் திங்கள்கிழமையை(19.02.2024) முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தினமும் இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 550 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

மேலும் பெங்களூரு மற்றும் பிற இடங்களுக்கு கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 750 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதே சமயம் ஞாயிற்றுக்கிழமை (18.02.2024) சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்பதிவு செய்து பயணிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.