தமிழ்நாட்டில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (06/10/2021) காலை 07.00 மணிக்குத் தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (06/10/2021) காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், "ஒன்பது மாவட்ட முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 09.00 மணி நிலவரப்படி 7.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒன்பது மாவட்டங்களிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 129 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, முதற்கட்ட வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. காவலர்கள், ஊர்க்காவலர் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என 39,408 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 12,318 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 74 மையங்களில் எண்ணப்பட உள்ளன" எனத் தெரிவித்தார்.