Skip to main content

டிஎன்சிஎஸ்சி கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் திடீர் மாயம்!      

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

7 thousand tons of rice bags from TNCSC warehouse suddenly lost

 

தர்மபுரியில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் திடீரென்று மாயமான சம்பவம்  அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பங்களா பின்பக்கத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் (டிஎன்சிஎஸ்சி) சொந்தமான திறந்தவெளி கிடங்கு செயல்பட்டு வருகிறது. டிஎன்சிஎஸ்சி மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு, இந்த திறந்தவெளி கிடங்கில் சேமித்து  வைக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து தேவைக்கேற்ப நெல் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அரிசியாக அரைத்து மீண்டும்  டிஎன்சிஎஸ்சி கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அரிசி, ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.     

 

இந்நிலையில் தர்மபுரி டிஎன்சிஎஸ்சி கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் திடீரென்று மாயமாகி விட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து டிஎன்சிஎஸ்சி ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தக் கிடங்கிற்கு நேரில் வந்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானது உறுதி ஆகியுள்ளது.     

 

இது தொடர்பாக டிஎன்சிஎஸ்சி அதிகாரிகளிடம் பேசினோம். “கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தஞ்சை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தர்மபுரிக்கு ரயில் மூலம் 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்  வந்திறங்கின. அவற்றில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் குறைந்துள்ளதாக ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறை கூறியதன் பேரில், நாங்களும் நேரடி விசாரணையில் இறங்கியுள்ளோம். இந்த மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறோம். இந்த மாதத்தில் இருப்பு வைத்துள்ள நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்பினால்தான், உண்மையில் எத்தனை மூட்டை இருப்பு குறைவு என்பது தெரிய வரும். ஊழியர்கள் பற்றாக்குறையால் விசாரணை நடத்துவதில் சிரமம் உள்ளது. எங்கு தவறு நடந்திருக்கிறது என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார்கள் டிஎன்சிஎஸ்சி அதிகாரிகள்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.