Skip to main content

7 ஆயிரம் டன் நெல் மூட்டை மாயமான விவகாரம்; கலெக்டர் புது விளக்கம்!

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

7 thousand tons of paddy bundle is a mysterious affair; Collector New Description!

 

தர்மபுரி மாவட்டத்தில், டி.என்.சி.எஸ்.சி. கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமான புகாரில், அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை முழுமையாக அனுப்பிய பிறகே, நெல் மூட்டைகள் மாயமானதா இல்லையா என்பது தெரிய வரும் என்று புது விளக்கம் அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

 

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள மாவட்ட ஆட்சியர் பங்களா பின்புறத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (டி.என்.சி.எஸ்.சி.) திறந்தவெளி கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில மாதங்களில் 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாகவும் புகார்கள் கிளம்பின. 

 

இதுகுறித்து துறை சார்ந்த கண்காணிப்புக்குழு, முதல்கட்ட விசாரணை நடத்தியது. அதேநேரம், தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் 80 நெல் அரவை ஆலைகளில் டி.என்.சி.எஸ்.சி. தரப்பில் இருந்து அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் விவரம் சரியாக உள்ளதா என்றும் விசாரணை நடத்தினர். 

 

கண்காணிப்புக் குழுவினர் நடத்திய விசாரணையில், நெல் மூட்டைகள் மாயமாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சாந்தி, நெல் மூட்டைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பு இல்லை என்றதோடு, இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். 

 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சாந்தி, மே 31ம் தேதி டி.என்.சி.எஸ்.சி. திறந்தவெளி கிடங்கிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: “டி.என்.சி.எஸ்.சி. கிடங்கில் இருந்து 7 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மாயமானதாக வந்த புகாரின்பேரில், தணிக்கை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தரக்கட்டுப்பாட்டுத்துறையின் மூத்த அதிகாரிகள், கண்காணிப்புக் குழுவினர் நேரில் ஆய்வு செய்துள்ளனர். 

 

முதல்கட்ட விசாரணையில், டெல்டா மாவட்டங்களில் இருந்து 22,273 மெட்ரிக் டன் நெல் வரப்பெற்றது. இதில் 71,174 டன் நெல், அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15,098 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு உள்ளது. 130 ஸ்டாக்குகளாக அவற்றை அடுக்கி வைத்திருக்கிறோம். 

 

ஒரு ஸ்டாக்கில் சரியாக அடுக்கி வைத்தால் 2,952 மூட்டைகள்தான் வைக்க முடியும். ஆனால் கிடங்கு ஊழியர்கள் சில ஸ்டாக்குகளில் 3 ஆயிரம் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். அதனால் மொத்தமுள்ள 130 ஸ்டாக்குகளில் 122 ஸ்டாக்குகளில் முழுமையாகவும், 8 ஸ்டாக்குகளில் பாதியாகவும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. 

 

இவற்றில் சில மூட்டைகள் சரிந்துள்ளன. சரிந்த மூட்டைகளை முதல்கட்டமாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி உள்ளோம். இதற்காக 100 தொழிலாளர்கள் வந்துள்ளனர். 120 லாரிகள் வந்துள்ளன. அரவை ஆலைகளுக்கு முழுவதும் அனுப்பி வைத்த பிறகுதான் நெல் மூட்டைகள் மாயமாகி உள்ளனவா இல்லையா என்பது தெரிய வரும். எங்களுடைய முதல்கட்ட விசாரணையில், நெல் மூட்டைகள் எதுவும் மாயமாகவில்லை எனத் தெரியவந்துள்ளது” என்றார் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி.

 

இந்த ஆய்வின்போது டி.என்.சி.எஸ்.சி. மண்டல மேலாளர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.