Skip to main content

7 தமிழர்களை புத்தாண்டில் விடுதலை செய்ய வேண்டும் : பாமக வலியுறுத்தல் 

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
7 tamil


 


பாமக பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 7 தமிழர்களை புத்தாண்டில் விடுதலை செய்ய வேண்டும் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 

தீர்மானம் 1 : வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு மறைவுக்கு இரங்கல்
 

வன்னியர் சங்கத்தின் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான மாவீரன் ஜெ.குரு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்  கடந்த மே மாதம் 25&ஆம் தேதி காலமானார். அவரது மறைவு பா.ம.க.வினருக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது.
 

மாவீரன் குரு மீது மருத்துவர் அய்யா அவர்கள் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். மருத்துவர் அய்யா மீது மாவீரன் குரு மிகுந்த மரியாதையும், விசுவாசமும் கொண்டிருந்தார். ‘மரணம் மட்டுமே மருத்துவர் அய்யாவிடமிருந்து தம்மை பிரிக்கும்’ என்று முழங்கி மருத்துவர் அய்யா அவர்கள் மீது தாம் கொண்டிருந்த மரியாதையையும், பற்றையும் வெளிப்படுத்தினார். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை தமிழக  முதலமைச்சராக்க வேண்டும் என்பது தான் நமது லட்சியம்; அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய மாவீரன் குரு அவர்கள், அதற்கேற்றவாறே செயல்பட்டு வந்தார்.

 

மாவீரன் குருவுக்கு உடல் நலம் பாதித்தது தெரிந்ததுமே மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் துடித்துப் போனார்கள். அவருக்கு உலகத்தர மருத்துவம் அளிக்க  நடவடிக்கைகள் மேற்கொண்டனர். கடுமையாக போராடியும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
 

மாவீரன் குரு அவர்களின் மறைவுக்குப் பிறகு அவருக்கு திரு உருவச்சிலை திறப்பு, சட்டக்கல்லூரி வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டல் என்று தொடர்ந்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்து நினைவு மணிமண்டபம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் அன்பையும், பாட்டாளி மக்கள் கட்சியினரின் பாசத்தையும் பெற்றிருந்த மாவீரன் குரு அவர்களின் மறைவு அனைவரையும் பாதித்திருக்கிறது. அவரது மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 
 

தீர்மானம் 2 : மேகதாது அணை குறித்த ஆய்வுக்கான அனுமதியை திரும்பப்பெற வேண்டும்
 

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைத் தயாரிக்கத் தேவையான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரானதாகும்.
 

 

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி பாசன மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகும் ஆபத்துள்ளது.

 

 

அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இன்றி அணை கட்டுவது உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் அளித்த தீர்ப்புகளுக்கு எதிரானது ஆகும். அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை; ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கம் மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அரசு, ஒரு மாநிலத்திற்கு ஆதரவாக செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதும் ஆகும்.


 

எனவே, மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 

தீர்மானம் 3 : காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்!

 

காவிரி நீர்ப்பகிர்வு குறித்த நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக நீண்ட போராட்டத்துக்குப்  பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த ஜூன் 22-ஆம் தேதி அமைக்கப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் ஆணையத்துக்கு இன்னும் முழுநேரத் தலைவர் நியமிக்கப்படவில்லை. 
 

 

அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சமான ‘அணைகளை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம்’ காவிரி ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. நடப்பாண்டில் காவிரியில் அளவுக்கு அதிகமாகவே தண்ணீர் கிடைத்ததால் நீர்ப்பகிர்வில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஒருவேளை வரும் ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரை  பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம்  நிறைவேற்ற மறுத்தால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காவிரி பிரச்சினையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி தமிழகம் பெற்ற உரிமைகள் பயனற்றுப் போய்விடும்.
 

 

எனவே, காவிரி ஆற்று நீரில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு முறையாக கிடைப்பதை  உறுதி செய்யவும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் காவிரி ஆற்றில் உள்ள அனைத்து அணைகளையும் கையாளும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன், காவிரி ஆணையத்திற்கு உடனடியாக முழுநேரத்   தலைவரை நியமிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

 தீர்மானம் 4. கஜா புயல் நிவாரண உதவியை மத்திய அரசு  உடனடியாக வழங்க வேண்டும்!

 

 

காவிரி பாசன மாவட்டங்களை கஜா புயல் தாக்கி இன்றுடன் 45 நாட்கள் ஆகும் நிலையில், பாதிக்கப் பட்ட பகுதிகளில் இன்று வரை இயல்பு நிலைமை திரும்பவில்லை. கிராமப் பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. வீடுகளை இழந்த மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை. ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே நிவாரண உதவி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. 
 

 

மற்றொருபுறம் மத்திய அரசிடம் முதற்கட்டமாக தமிழக அரசு கோரிய ரூ.15,000 கோடி நிதியில் ஒரு பைசா கூட இன்னும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு நவம்பர் 27&ஆம் தேதியே ஆய்வை முடித்து விட்டது. அதன்பின் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை மத்தியக் குழு அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை. மத்தியக் குழு எப்போது அறிக்கை தாக்கல் செய்யும்; எப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கும் எனத் தெரியவில்லை.

 

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்கள் தங்க இடமின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு இவ்வளவு தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் கஜா புயல் நிவாரண உதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருவது உள்ளிட்ட மறுவாழ்வுப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கோருகிறது.
 

தீர்மானம் 5: உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்! 
 

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரப் பாதைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் உழவர்களின் அனுமதி பெறாமல், உழவர்களின் விளை நிலங்களில் நுழைந்து அளவீடு செய்வது அரச அத்துமீறலாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
 

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மின்சாரமும், அதற்காக மின்பாதைகளும் அவசியம் ஆகும். ஆனால், அதற்காக உழவர்களில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, வாழ்வாதாரங்களை பறிப்பது நியாயம் அல்ல. இத்தகைய மின்பாதைகள் கேரளத்தில் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும் போது கூட பூமிக்கு அடியில் தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த மின்பாதைகளையும் சாலையோரத்தில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்த வேண்டும்; அதன் மூலம் உழவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 

தீர்மானம் 6: கொங்கு மண்டலத்தில்  தொழில்துறையினருக்கு  ஊக்குவிப்புத் திட்டம் தேவை! 
 

தமிழகத்தின் தொழில் தலைநகரமாக திகழ்வது கோவை ஆகும். கோவை, திருப்பூர் மற்றும் அவற்றை ஒட்டிய கொங்கு மண்டலப் பகுதிகளில் இல்லாத தொழில்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து தொழில்களும் இப்பகுதியில் நடைபெறுகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த மோட்டார் பம்ப் தேவையில் 50 விழுக்காடும்,  கிரைண்டர் தேவையில் 90 விழுக்காடும் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. 15 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி  மூலம் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. வேளாண் கருவிகள், நூற்பாலைகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், வாகன உதிரிப் பாகங்கள், காற்றாலைக்கான பாகங்கள், தங்க, வைர நகைகள் என அனைத்து வகையான தொழில்களும் கொங்கு மண்டலத்தில் நடக்கின்றன.

 

ஆனால், பல்வேறு காரணங்களால் அனைத்துத் தொழில்களும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து  வருகின்றன. இதே நிலை நீடித்தால் கோவை, திருப்பூருக்கு சென்றால் வேலை தேடி பிழைத்துக் கொள்ளலாம் என்றிருந்த நிலை மாறி, கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களுக்கே வேலை இல்லை என்ற நிலை உருவாகி விடும். தேவையான கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.  கடந்த 2008-ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது, அதைப் போக்கி தொழில்துறையை முன்னேற்ற ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதேபோல், இப்போதும் கோவை மண்டலத் தொழில் வளர்ச்சிக்கான ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் புத்தாண்டில் அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 7:  ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதைத் தடுக்க சட்டப்பேரவையில் தனிச் சட்டம்!

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணை நியாயமற்றது; ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த மே 29-ஆம் தேதி தமிழக அரசு ஆணையிட்ட போதே அது வலிமையானது அல்ல; மக்களை ஏமாற்றுவதற்காக ஆலையை மூட உத்தரவிடுவது போல தமிழக அரசு நடிக்கிறது; தமிழக அரசின் இந்த ஆணை நீதிமன்றத்தில் நிற்காது என்று மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும் எச்சரித்திருந்தனர். அவர்கள் கூறியது தான் இப்போது உண்மையாகியுள்ளது.

 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற தமிழக அரசு, அதனால் மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பை போக்கவே ஆலையை மூடுவது போன்ற நாடகத்தை நடத்தியது. இப்போதும் கூட பசுமை தீர்ப்பாயத்தின்  தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறும் தமிழக அரசு, அங்கு வழக்கை வலுவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மறுக்கிறது. தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது சட்டம் இயற்றி அதனடிப்படையில் இந்த வழக்கை எதிர்கொள்வது தான் சரியாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.
 


தீர்மானம் 8 : சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்

 

சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டம் தமிழகத்திற்கு தேவையற்றது என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக 7000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பதால் பத்தாயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து சொந்த ஊரில் அகதிகளாக வாழ நேரிடும் என்று எச்சரித்த  பா.ம.க, இச்சாலைத் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் கருத்துக்கேட்பு, போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தியது. எனினும் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் அரசுகள் உறுதியாக இருந்ததால், அத்திட்டத்திற்கு எதிராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்த வழக்கில், பசுமைச் சாலைத் திட்டத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  ஆனால், அதன்பிறகும் நிலங்களைக் கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. பசுமைச்சாலையை அமைத்தே தீருவோம் என்று தமிழக முதலமைச்சர் முழக்கமிட்டார். இவற்றையும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன்பயனாக இந்த வழக்கின் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனைக் காக்க மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு இந்தப் பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வழக்கில் நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
 

சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் இருக்கும் நிலையில், நான்காவதாக இந்த பசுமைச்சாலை அமைப்பதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அதேநேரத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். இந்த உண்மையை உணர்ந்து, பிடிவாதம் பிடிக்காமல், சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை  கைவிட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 9: உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த  வேண்டும்
 

தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் அதன்பின் இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் பல முறை கண்டிப்புடன் கூறியும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.

 

உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து உடனுக்குடன் முடிவெடுத்து செயல்படுத்த முடியவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், நிதிக்குழு பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. 2018-19 ஆம் ஆண்டின் முதல் பாதிக்கான ரூ.850 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.5000 கோடி நிதி முடக்கப் பட்டுள்ளது.  இதனால் உள்ளாட்சிகளில் அன்றாட செலவுகளுக்குக் கூட நிதியில்லாத நிலை உருவாகியுள்ளது.

 

நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி சீரமைப்புப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில்,  உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிடும்படி பா.ம.க கேட்டுக்கொள்கிறது.
 

தீர்மானம் 10: நெய்வேலியில் சுரங்கம்-3 அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நெய்வேலி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில்  ஏற்கனவே 3 சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஆண்டுக்கு 28.50 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதுவே தேவைக்கும் அதிகம் எனும் நிலையில், இப்போது சுரங்கம்-3 என்ற பெயரில் நான்காவது சுரங்கத்தை அமைக்க என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்து, அதற்காக 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. தேவையற்ற  இச் சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களால் 26 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரங்களை இழப்பர்.

 

என்.எல்.சி. நிறுவனம் தேவைக்கும் அதிகமாகவே நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. எதிர்காலத் தேவைக்காக 10,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் தரும் நிலங்களை  உழவர்களிடமிருந்து பறிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி, புதிய சுரங்கத்திற்காக மணிமுத்தா, வெள்ளாறு ஆகிய ஆறுகளை விருத்தாசலத்திற்கு முன்பாக இணைக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால், மழைக்காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும். இது ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் ஆபத்தாகும். மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கைப் பேரிடர் தடுப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சுரங்கம் -3 அமைக்கும் திட்டத்தையும், அதற்காக நிலங்களை பறிக்கும் முடிவையும் என்.எல்.சி நிறுவனம் அடியோடு ரத்து செய்ய வேண்டும்.
 

தீர்மானம் 11: அத்திக்கடவு - அவினாசி உள்ளிட்ட பாசனத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்!
 

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அத்திக்கடவு - அவினாசி திட்டம் ரூ.3523 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.1532 கோடிக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பதால், திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாமோ? என்ற ஐயம் உழவர்களிடையே எழுந்துள்ளது. பொதுப்பணி துறைக்குரிய 31 ஏரிகள், பஞ்சாயத்துக்கு உட்பட்ட 40 குளங்கள், 538 குட்டைகள் ஆகியவற்றை நிரப்பும் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட  உழவர்கள் குழுக்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் விருப்பப்படி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 

 

அத்துடன், ஆணைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் பாண்டியாறு - புன்னம்புழா, பரம்பிக்குளம் - ஆழியாறு ஆகிய பாசனத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இவை தவிர மேட்டூர் அணை உபரி நீர் மேலாண்மைத் திட்டம், மேட்டூர் அணை வலதுகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம், சேலம் மாவட்டத்தில் தோனி மடுவு பாசனத் திட்டம், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம், தருமபுரி மாவட்டத்தில் என்னேகொல்புதூர் பாசனத்திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களையும், பல்வேறு ஆறுகளில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின்  சிறப்பு பொதுக்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது. 

 

தீர்மானம் 12 : காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்!

 

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அறியப்பட்ட காவிரி படுகையை இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மண்டலமாக மாற்ற மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மீத்தேன் எரிவாயுத் திட்டம், பெட்ரோக் கெமிக்கல்ஸ் மண்டலம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய்க் கிணறுகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 149 எண்ணெய்க் கிணறுகள், எரிவாயு வயல்களை தனியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

 

தனியார் நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் எந்த வரையறைக்கும் கட்டுப்படாமல் எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டும் என்பதால் காவிரிப் படுகையில் பூகம்பம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படக்கூடும். ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் இந்த வயல்கள் இருந்தால் எவ்வளவு காலத்தில்  காவிரிப் படுகை பாலைவனமாகுமோ, அதில் பாதி காலத்தில் இப்போது பாலைவனமாகும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால், காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்மைக்கு எதிரான எந்த தொழிற்சாலைகளையும் அனுமதிக்கக்கூடாது. இதற்காக காவிரி பாசன மாவட்டங்களை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்டத்தை வரும் 02.01.2019 அன்று தொடங்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கோருகிறது.
 


தீர்மானம் 13:  7 தமிழர்களை புத்தாண்டில் விடுதலை செய்ய வேண்டும்

 

 

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஐந்தாண்டுகளாக  வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளது.

எழுவர் விடுதலை குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்  161-ஆவது பிரிவின்படி மாநில அரசே அவர்களை விடுதலை செய்து கொள்ளலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதே மாதத்தின் 9-ஆவது நாளில் எழுவரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அத்தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 113 நாட்களாகி விட்டன. ஆனால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுனர் மாளிகை இதுவரை முடிவெடுக்காதது தமிழக மக்களிடம் அயற்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுனருக்கென தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவது தான் அவரது கடமை. 

 

எனவே, 7 தமிழர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று 7 தமிழர்களையும் புத்தாண்டில் விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 14:  தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்
 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூகத் தீமையாக மது உருவெடுத்துள்ளது. மதுவால் தமிழகத்தில் ஆண்டு  தோறும் 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளில் ஆண்டுக்கு சராசரியாக 16,000 பேர் உயிரிழக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் மன நோய்க்கு ஆளாகின்றனர். இளம் கைம்பெண்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு முடிவு கட்டுவதற்காகத் தான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அத்துடன் சட்டப்போராட்டம் நடத்தி தமிழக நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்கடைகளை மூடியது.
 

ramadoss



ஆனால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக, மதுக்கடைகளை மூடாமல், மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதில் தான் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் மது விற்பனையும், மது வருவாயும் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் கேடு ஆகும். இந்த உண்மையை உணர்ந்து  தமிழ்நாட்டில் வரும் தைத் திருநாள் முதல் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது. 

 

தீர்மானம் 15:  ஊட்டி உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தை மூடும் திட்டத்தைக் கைவிடுக!

 

 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகிலுள்ள முத்தோரையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூட இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு முடிவு செய்திருக்கிறது.1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய உருளைக்கிழங்கு நிறுவனம் தென்னிந்தியாவில் உருளை சாகுபடியை பெருக்குவதில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. உருளைக்கிழங்கு  விளைச்சலை பாதிக்கும் நூற்புழு தாக்குதல், இலைக்கருகல் நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்ட குப்ரி கிர்தாரி, குப்ரி ஹிமாலினி, குப்ரி சூர்யா, குப்ரி சக்யாத்ரி ஆகிய உருளைக்கிழங்கு வகைகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. 
 

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பயிரிடுவதற்கு  ஏற்ற விதை உருளைக்கிழங்குகளை இந்த நிறுவனம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் மூடப்பட்டால்  தமிழகத்தில் உருளைக்கிழங்கு சாகுபடியே செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு செய்தாலும் உருளைகள் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி இழப்பு தான் ஏற்படும்.  ஒவ்வொரு பயிருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டால் போதுமானது என்ற அடிப்படையில் ஊட்டி உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூடும் மத்திய அரசின் முடிவு தவறானது. தென் மாநிலங்களில் லாபகரமான உருளை சாகுபடிக்கு ஊட்டி முத்தோரை மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் தான் ஆதாரம் ஆகும். 
 

எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில விவசாயிகளின் நலன் கருதி ஊட்டி உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு  கோருகிறது.
 

தீர்மானம் 16:  போர்க்குற்றம்: இலங்கையை தண்டிக்க ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருக!
 

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழினத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றங்கள் இன்னும் தொடருகின்றன. இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைய விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
 

அடுத்தக்கட்டமாக போர்க்குற்றங்கள் இழைத்தவர்களை நீதிமன்றக் கூண்டுகளில் ஏற்றி தண்டனை பெற்றுத்தரும்படி இலங்கைக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையிட்டது. அதற்காக காலக்கெடு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகிறது. ஆனால், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை இலங்கை அரசு மேற்கொள்ளாத நிலையில், அது குறித்த அறிக்கையை, ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தில் ஆணையர் தாக்கல் செய்யவிருக்கிறார்.
 

அந்தக் கூட்டத்தில், ‘‘இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, சர்வதேச பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும்-இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் ( International Criminal Court ) விசாரணைக்கு உட்படுத்தக் கோரி ஐநா பொதுச்சபைக்கும் ஐநா பாதுகாப்புச் சபைக்கும் பரிந்துரைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க பொதுக்குழு கோருகிறது.
 

தீர்மானம் 17:  2019-ஆம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக கடைபிடிக்க உறுதி!
 

2017-ஆம் ஆண்டு இதே நாளில்  மதுரையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் 2018-ஆம் ஆண்டை இளைஞர்கள் எழுச்சி ஆண்டாக கடைபிடிக்க  தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பாட்டாளி இளைஞர்கள் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், பாட்டாளி மாணவர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசியல் பயிற்சிகள் வழங்கப் பட்டன. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த அவர்கள் தயாராகியுள்ளனர்.
 

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தொழில் மற்றும் பொருளாதார நிலையில் சிங்கப்பூர், சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாகவே தமிழ்நாடு திகழ்ந்தது. ஆனால், அடுத்த 50 ஆண்டுகளில், கல்வி, தொழில்துறை, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் அந்த நாடுகள் எட்டிய வளர்ச்சியில் 10 விழுக்காடு அளவுக்குக் கூட தமிழகத்தால் முன்னேற்ற முடியவில்லை.
 

இதற்கான காரணங்களில் முக்கியமானவை தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், தொலைநோக்குப் பார்வையற்ற ஆட்சித் தலைமைகள், மக்கள் சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை மது, இலவசங்கள், திரைப்படம் ஆகியவற்றுக்கு அடிமையாக்கி வைத்தது ஆகியவை தான். இத்தீமைகளை ஒழித்தால் மட்டுமே தமிழகத்தை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக முன்னேற்ற முடியும்.
 

இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2019-ஆம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக கடைபிடிக்கவும் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் பயிலரங்குகள், கருத்தரங்குகள், களப்பயிற்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தவும் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு உறுதியேற்கிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சமூகநீதிக்கு என்ன அர்த்தம் என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? - அன்புமணி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Anbumani question Does the India Alliance know what social justice means

சிதம்பரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் இடையில் யார், யாரோ வந்து குழப்புவார்கள். இடையில் அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்பார்கள். ஓரு ஓட்டு கூட அதிமுகவிற்கு செல்லக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், இந்நேரம் அத்தனை இயற்கை வளங்களையும் திமுகவும், அதிமுகவும் நாசப்படுத்தியிருப்பார்கள். காவிரி டெல்டா, வீராணம் ஏரியை நாசப்படுத்தியிருப்பார்கள். 2008-ல் இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தார்கள். சிதம்பரம் தொகுதியில் உள்ள 25 கிராமங்கள் உள்ளிட்ட 45 கிராமங்கள் பாதிக்கும் திட்டத்தை ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். அதன் பிறகு நான் கிராம, கிராமமாக சென்று போராட்டம் செய்தேன். அதன் பிறகுதான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அத்திட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள். பாமக இல்லை எனில் மூன்றாவது சுரங்கம் இப்பகுதியில் வந்திருக்கும்.

இத்தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் இத்தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளாரா? வீராணம் ஏரி 1.50 டிஎம்சி கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரி. அந்த ஏரி இதுவரை தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமல்ல பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் என கொண்டு வந்தார்கள். அப்போது முதன் முதல் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது இந்த அன்புமணி ராமதாஸ்தான். அப்போது திருமாவளவன் வாயை திறக்கவில்லை. திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையிலிருந்து கச்சத்தீவு பிரச்சனை வரை திமுக கூட்டணி துரோகம் செய்துள்ளது. அதற்கு உடந்தையாக திருமாவளவன் உள்ளார். இந்த தேர்தலில் சாதி பிரச்சனை கிடையாது. சமுதாய பிரச்சனை கிடையாது. நம்ம கூட்டணி, அவங்க கூட்டணி வெவ்வேறு. இன்னொரு கூட்டணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி உள்ளது. அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அதுவும் காணாமல் போய்விடும். ஏதோ நம்ம துரோகம் பண்ணிவிட்டோம் என கூறுகின்றனர். யார் துரோகம் செய்தது. நாம் மற்றவர்களை தோலில் சுமந்து மாற்றி, மாற்றி முதல்வராக்கியுள்ளோம். எங்களை துரோகி என சொல்ல உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. மண்ணிற்கும், மக்களுக்கும் உழைக்கும் பாட்டாளி நாங்கள்.

இது இரண்டு சமுதாயத்திற்கான தேர்தல் அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம். 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இருகட்சிகளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். போதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை நானும், ராமதாஸ் அவர்களும் சேர்ந்து எடுத்தோம்.

இருகட்சிகளும் ஆட்சிக்கு வந்த முதலில் உங்கள் தாத்தாவை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். அதன் பிறகு அப்பா, கணவர், மகனை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். தற்போது பேரப்பிள்ளைகளை மதுப்பழக்த்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுவைவிட தற்போது மோசமான பிரச்சனை உள்ளது. அமெரிக்காவில் என்ன, என்ன போதை பொருள்கள் இருக்கோ, அவையல்லாம் மாத்திரை, பவுடர் வழியில் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒரு வருடம் பயன்படுத்தினால், அந்த மாணவரை மீட்டெடுக்க முடியாது. இதைப்பற்றி எந்த கவலையுமில்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கடலூர் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் சாலையோரம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அவர் தங்கர்பச்சானை ஜெயித்து விடுவீர்கள் என கூறியுள்ளார். அடுத்த நாள் கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர்.

அந்தளவுக்கு திமுகவிற்கு சகிப்புத் தன்மை இல்லை. சாராயம் விற்பவன், கள்ளக்கடத்தல் பண்ணுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், போதை பொருள்கள் விற்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். போதை பொருள்கள் விற்பவர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்யாற்றில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுதான் இந்த கொடுங்கோல் ஆட்சி. விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறேன். இது விவசாய பூமி. இந்த புண்ணியபூமியை நாசப்படுத்தும் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் நீர் ஓடுகிறது. எத்தனை முறை 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். காவிரியை காப்போம் நடைபயணமாக வந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் 87 கிலோ மீட்டர் அளவில் 20 மணல் குவாரிகள் அமைத்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். தற்போது நாம் அதனை செய்யாவிடில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.  நிச்சயமாக இந்த தேர்தலில் பானை உடைக்கப்படும். இந்த தேர்தலில் தாமரையும், மாம்பழமும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இனி நீங்கள் கூறும் அத்துமீறு, அடங்கமறு என்பதெல்லாம் எடுபடாது. நான் இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்தும் அரசியல் செய்கிறேன். இளைஞர்கள் அனைவரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.  அதற்காகதான் இடஓதுக்கீடு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?  திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது.

நான் திருமாவளவனை கேட்கிறேன். நீங்கள் இருக்கிற கூட்டணியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா? சமூகநீதி என்றால் என்ன அர்த்தம் என அந்த கூட்டணிக்கு தெரியுமா? ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.. அவரது மகன் விளையாட்டு பிள்ளை, விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். சினிமாவில் நடித்தால், போதுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மரியாதை கொடுக்க தெரியுமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதில் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளார்கள். ஆனால் 3 பட்டியலின  சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் 30வது இடத்தில் சி.வெ.கணேசன், 33வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழி. இதுதான் நீங்கள் சமூகநீதிக்கு கொடுக்கும் மரியாதை.

சமூகநீதிக்கான ஓரே தலைவர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான். வேறு யாருக்கும் தகுதி கிடையாது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் 3 தொகுதிகள் பெண்கள் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகள் , பட்டியலினத்திற்கு வழங்கியுள்ளோம். இதுதான் உண்மையான இடஓதுக்கீடு, உண்மையான சமூகநீதி. பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமிக்கு கொடுத்தோம். இந்தியாவிலேயே ஒரே ஓரு இட ஒதுக்கீடு யாரும் கேட்காமல், போராடாமல் கிடைத்தது எதுவென்றால், நான் மத்திய அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் பட்டியலின சமுதாயத்திற்கு கிடைத்ததுதான். எம்பிபிஎஸ். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த கட்சி பாமகதான்.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டி தீருவோம் என அங்குள்ள முதல்வர் சித்த ராமைய்யா செல்கிறார். ஓரே கூட்டணியில் உள்ள இங்குள்ள ஸ்டாலின், திருமாவளவன் ஏன் வாயை திறந்து கேட்கவில்லை. வாக்கிற்காக வாயை திறக்க மறுக்கிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் எள்ளவும் விட்டு கொடுக்க மாட்டோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தைரியமாக கேட்போம். கச்சத்தீவை காங்கிரஸூம், திமுகவும் தாரை வார்த்த பிறகுதான் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1200 படகுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடலூர் வள்ளலார் பெருவெளி மையத்தை, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கைவைத்துள்ளார்கள். வள்ளலார் வாழ்ந்த அந்த மண்ணை விட்டு விட்டு வெளியில் சென்று மையத்தை கட்டுங்கள்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ் (கடலூர்), ரவி (அரியலூர்), செந்தில்குமார் (பெரம்பலூர்), முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், தேவதாஸ் படையாண்டவர், ஜெய.சஞ்சீவி, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, ஏ.ஜி.சம்பத், சாய்சுரேஷ், பாஜக ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், வே.ராஜரத்தினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி புரட்சிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.