7 passes away at vellore government hospital

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அடுத்தடுத்து இறந்தனர். இவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டார்கள் என்கிற தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இறந்த 7 நபர்களில் 4 பேர் கரோனா வார்டிலும், மற்றவர் கரோனா அல்லாத உயர் சிகிச்சை வார்டிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். ஆக்ஸிஜன் பிரச்சனையால் இறக்கவில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

Advertisment

மருத்துவக்கல்வித்துறை இயக்குநர் நாராயணபாபு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில், சில தகவல்கள் கசிய துவங்கியுள்ளன. அதாவது வேலூர் மருத்துவக்கல்லூரியில் பழையது, புதியது என 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் டேங்கர்கள் உள்ளன. இதிலிருந்து தான் வார்டுகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளையாகிறது. இதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் வாயு வார்டுகளுக்கு செல்லவில்லை. இதனை டெக்னிஷியன்கள் கவனிக்கவில்லை, அதாவது அலட்சியமாக விட்டுவிட்டனர்.

அதேபோல் ஆக்ஸிஜன் டேங்கர்களுக்குள் இருந்த ஆக்ஸிஜன், திரவ நிலையில் இருந்து திடபொருளாக மாறியதாக டெக்னிஷியன்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனை மருத்துவர்களும், டீன் சாந்தியும் கவனத்துக்கு சென்றும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்பட்டது. உயிரிழப்புகள் தொடங்கியபின்பே ஆபத்தை உணர்ந்து அவசர அவசரமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலமாக நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

Advertisment

உண்மையான தகவல்கள் விசாரணை அறிக்கையில் இடம்பெறுமா அல்லது மற்றவர்களை காப்பாற்ற ஆக்ஸிஜன் பிரச்சனையே இல்லை என மாவட்ட ஆட்சியர் சொன்னதுப்போல் சொல்வார்களா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மருத்தவமனை அமைந்துள்ள அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம். இறந்த ஏழைகள் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.