Skip to main content

7 மணிநேரம் தடைபட்ட இரு மாநில போக்குவரத்து!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து தாளவாடி மலைபகுதி தொடங்குகிறது. இதில் உள்ள திம்பம் மலைப்பாதையில் பாறையில் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் உயிரிழந்தார். இதனால் தமிழகம் மற்றும் கர்நாடக  மாநிலத்திற்கிடையே 7 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து பெரிய வெங்காயம் மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி கோவை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. லாரியை திருப்பூர் திருக்குமரன் நகரை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் ஓட்டி வந்தார்.

 

 7 hours of blocked two-state traffic!


நேற்று காலை திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து சென்றன. வெங்காய பாரம் ஏற்றி வந்த லாரி 26 மற்றும் 25 ம் கொண்டைஊசி வளைவுகளுக்கிடையே உள்ள சாலையில் சென்றபோது கடும் பனி மூட்டம் காரணமாக எதிரே வழி தெரியாததால் சாலையோரத்தில் இருந்த பாறை மீது லாரி மோதியது. இந்த விபத்தில் முன்புற கேபினுக்குள் இருந்த டிரைவர் ஸ்ரீதர் உள்ளே சிக்கிக்கொண்டார். லாரி பாறையில் மோதி விபத்து ஏற்பட்டதோடு  மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கி நீண்ட வரிசையில் நின்றன.

 

 7 hours of blocked two-state traffic!


இதுகுறித்து தகவல் கேட்டு வந்த ஆசனூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று லாரியின் முன்பகுதியில் சிக்கிய டிரைவரை மீட்டு 108 ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் உயிரிழந்தார்.கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி நகர்த்தப்பட்டது. லாரியில் இருந்த வெங்காய முட்டைகள் சிதறியதால் தொழிலாளர்கள் வெங்காயத்தை எடுத்து மீண்டும் மற்றொரு லாரியில் லோடு ஏற்றினர். மதியம் 12 மணியளவில் போக்குவரத்து சீரானது. கடந்த பல நாட்களாக திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் தினமும் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக இருமாநிலங்களுக்கிடையே பயணிக்கும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். 

 

 7 hours of blocked two-state traffic!

 

போலீசார்  லஞ்சம் வாங்கிக்கொண்டு கனரக வாகனங்களை இவ்வழியில் விடுவதால்தான் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்கிறார்கள் மக்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.