திருச்சி ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் உள்ளிட்ட மூன்று பேரிடம் இருந்து சுமார் 7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் தங்கம் கடத்தப்படுவதாக குற்றப்பிரிவு காவல்துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அந்த ரயில் திருச்சியை அடைந்த போது, அதில் இருந்த பயணிகளின் உடைமைகளை அவர்கள் சோதனையிட்டனர். அப்போது, மேற்குவங்கத்தைச் சேர்ந்த இரண்டு பேர் திருச்சியைச் சேர்ந்த அருணன் ஆகியோரது பெட்டிகளில் 6.8 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்தன. அத்துடன், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று பேரையும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். நகைகளை எங்கு வாங்கினார்கள்? எங்கு கடத்திச் செல்கிறார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த நகைகளை வணிகவரி அதிகாரிகளிடம் ஒப்படைத்த காவல்துறையினர், நகைகளின் சந்தை மதிப்பு ரூபாய் 3 கோடி எனத் தெரிவித்தனர்.