600 special buses operation

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் மூலம் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “அக்டோபர் 7 (சனிக்கிழமை) மற்றும் 8 ஆம் தேதி (ஞாயிறு) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு நாளை (06.10.2023) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை (06.10.2023) தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று (08.10.2023) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிடத்திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 5,896 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து சேவையினைப் பயன்படுத்தி, தங்களது பயணத்தினைத்திட்டமிட்டுக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.