6 person arrested for stealing AC in a novel way

சென்னை எர்னாவூர் மணலி விரைவுச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சபரி. இவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் வாகனம் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திரா மாநிலம் தடாவில் இருந்து 160 ஏ.சி. மற்றும் அதற்கான உப சாதனங்களை கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து கொல்கத்தா துறைமுகத்திற்கு கண்டெயனர் பெட்டகத்தில் வைத்து 160 ஏ.சி.க்கள் அனுப்பப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் கண்டெய்னர் பெட்டகத்தை திறந்து பார்த்தபோது 160 ஏ.சி. பெட்டிகளில் 111 ஏ.சி. பெட்டிகள் காணமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஏ.சி. நிறுவனம் எர்னாவூரில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் எர்னாவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 111 ஏ.சி.க்கள் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக போலீசார் ஜி.பி.எஸ். கருவிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

Advertisment

அப்போது தடாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஏசியை மணலி புதுநகருக்கு கொண்டு சென்று அங்கிருந்து கோடம்பாக்கத்திற்கு எடுத்துசென்றுள்ளனர். அதன் பின்னர் ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள 2 டன் ஏ.சி. சாதனத்தை கோவையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த நெடுமாறன், திருவெற்றியூர் சத்தியமூர்த்தி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், இளமாறன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.