Skip to main content

கணவன் உயிருக்கு 80 லட்சம் விலை வைத்த கும்பல்; மனைவியின் புகாரில் ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்

Published on 18/12/2022 | Edited on 18/12/2022

 

6 people who kidnapped the worker and threatened him with money were arrested!

 

தர்மபுரி அருகே, தொழிலாளியை கடத்திச்சென்று 80 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள கூத்தப்பாடி மடம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவருடைய மகன் விஸ்வநாதன் (37). இவருடைய மனைவி மஞ்சுளா. விஸ்வநாதன், மும்பையில் நொறுக்குத்தீனி கடை நடத்தி வந்தார். இரண்டு ஆண்டுக்கு முன்பு, சொந்த ஊர் திரும்பிய அவர், இங்கேயே தங்கிவிட்டார்.  

 

ஆனாலும் சரியாக வேலைக்குச் செல்லாமல், அவ்வப்போது கிடைத்த கூலி வேலைகளைச் செய்து வந்தார். டிச. 12ம் தேதி காலை பென்னாகரம் சென்ற விஸ்வநாதன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும், விசாரித்துப்பார்த்தும் அவர் சென்ற இடம் தெரியவில்லை. அவருடைய அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.  

 

இதனால் பதற்றம் அடைந்த விஸ்வநாதனின் மனைவி மஞ்சுளா, தனது கணவரை இரண்டு நாள்களாக காணவில்லை என்று ஒகேனக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  

 

மேலும் அந்தப் புகாரில், ''என் கணவரின் அலைபேசியில் இருந்து அவருடைய தம்பி பூபதிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் விஸ்வநாதனை உயிருடன் விடுவிப்போம். பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதேபோல் மர்ம நபர்கள் மூன்று முறை மிரட்டினர். என் கணவரை பத்திரமாக மீட்டுக் கொடுக்க வேண்டும்,'' என புகாரில் கூறியிருந்தார்.  

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பூபதியின் அலைபேசிக்கு வந்த அழைப்பு, எந்த செல்போன் டவர் எல்லைக்குள் வருகிறது என்பதை ஆய்வு செய்தனர். இதில், கடத்தல் ஆசாமிகள் சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து பேசியிருப்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்து வந்த மூன்று அழைப்புகளுமே ஒரே இருப்பிடத்தைக் காட்டியது.  

 

இதையடுத்து காவல்துறையினர் ஓமலூருக்கு விரைந்து சென்று கடத்தல் கும்பலை சல்லடை போட்டுத் தேடினர். மேலும், ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினரின் உதவியையும் நாடினர்.  

 

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (டிச. 16ம் தேதி) இரவு கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை ஓமலூர் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த 5 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.  

 

இதுகுறித்து பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் மற்றும் ஒகேனக்கல் காவல்நிலைய காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் கைதான கடத்தல் கும்பலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விஸ்வநாதனையும் பத்திரமாக மீட்டனர்.

 

விசாரணையில், ஓமலூரைச் சேர்ந்த ரத்தினம் (45), மணிவேல் மகன் பாஸ்கர் (24), மேட்டூர் பழனிசாமி மகன் தமிழரசன் (23), காடையாம்பட்டி காந்தி (43), பென்னாகரத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய 5 பேர்தான் விஸ்வநாதனை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியிருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.  

 

இது ஒருபுறம் இருக்க, கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரும் சிக்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. பிடிபட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.