6 people, including 3 women,passed away in a mysterious disease near Thalavadi

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மர்மநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 13 நாட்களில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கெளரி(65), மாதி(75), மாரன்(60), ரங்கன்(80), கேலன்(50) மற்றும் மாரே(47) ஆகியோரின் உயிரிழப்புக்கு தீவிர வயிற்றுப்போக்கும் வாந்தியும்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 4 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மலைக் கிராமங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் உடல்நிலை குறித்து மருத்துவ குழுவினர் கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். மக்கள் குடிநீராக பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீர், கிணற்று நீர், குட்டை நீர் ஆகிய இடங்களில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தினர்.

Advertisment

வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகிய நோய் பாதிப்புகளுக்கு உரிய மருந்துகளை வழங்கியுள்ளதால் தற்போது நோய் இன்றி அனைவரும் நலமாக உள்ளனர். இந்நிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாவந்தம், இட்டரை தடசலட்டி ஆகிய மலைக்கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் வட்டார மருத்துவர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.