6 people arrested for selling liquor on motorcycles; 124 bottles of liquor seized

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணிகளிலும், சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அதன்படி ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருக்கம்பாளையம் வாய்க்கால் கரை பகுதி அருகே ஒருவர் மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது சீட்டுக்கு அடியில் 34 மது பாட்டில்கள் அனுமதி இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் அவர் ஈரோடு 46 புதூர், சின்ன கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (59) என்பதுதெரிய வந்தது. இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவரிடமிருந்து 34 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைப் போல் தாளவாடி போலீசார் தாளவாடி அடுத்த மல்லன்குழி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மது பாக்கெட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. மொத்தம் 12 பாக்கெட் மதுவை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் அவர் தாளவாடி அடுத்த மாரியபுரம்பகுதியை சேர்ந்த ஜெயகிரியாஸ் (67) என்பது தெரியவந்தது. இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும்மது பாட்டில்கள், மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisment

இதே போல் அம்மாபேட்டை சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்மாபேட்டை அடுத்த மூலுயனூர் ராம்ராஜ் தோட்டம் அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.அவரை சோதனை செய்ததில் 59 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைப் போல் கடத்தூர் ஈரோடு டவுன் போன்ற பகுதிகளிலும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 124 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.