ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் ரூ.6 லட்சம் கொள்ளை!     

03:20 PM Aug 10, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் மணிகண்டன்(43). விவசாயம் செய்துவரும் மணிகண்டன் கள்ளக்குறிச்சி நகரின் கச்சேரி ரோடு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மதிய நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த வாகனத்தின் பெட்டியில் ஆறு லட்சம் ரூபாய் பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்து பூட்டிவிட்டு அருகில் ஒரு மறைவான இடத்திற்குச் சென்று சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். சிறுநீர் கழித்து விட்டுத் திரும்பி வந்து தனது இருசக்கர வாகனத்தைப் பார்த்தபோது பெட்டி திறந்திருந்தது, அதிலிருந்த பணத்தைக் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் அப்பகுதியில் செல்லும் மக்களிடம் விசாரித்தும், தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தப் பகல் நேர கொள்ளை குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்குச் சென்று மணிகண்டன் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் சத்தியசீலம் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT