Skip to main content

சேலத்தில் 60 ஆயிரத்துக்கு 6 லட்சம் ரூபாய் கார்? கவர்ச்சி அறிவிப்பால் மயங்கிய மக்கள்; தந்தை, மகன் சுருட்டிய 100 கோடி ரூபாய்!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

6 lakh car for 60 thousand in Salem? People fascinated by glamorous announcements; 100 crore rupees rolled by father and son!

 

சேலத்தில், போலியாக வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்த தந்தையும், மகனும் 60 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 6 லட்சம் ரூபாய் கார் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு, 100 கோடி ரூபாய் வரை சுருட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

 

சேலம் செவ்வாய்பேட்டை, அழகாபுரம் ஆகிய பகுதிகளில் சில ஆண்டுக்கு முன்பு, ஒரு தனியார் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தில் 60 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், 6 லட்சம் ரூபாய் கார், வெறும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் கிடைக்கும் என்று விளம்பரம் செய்தது. மேலும், சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் தங்கம், வெள்ளி விற்பனை செய்யப்படும் என்றும் டிவி, பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டனர்.

 

இந்த அறிவிப்புகளை நம்பி சேலம், நாமக்கல் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அந்நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். பலர் வட்டிக்குக் கடன் பெற்றும் முதலீடு செய்திருந்தனர்.

 

இது போதாதென்று, 60 ஆயிரம் ரூபாய் செலுத்தி 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான காருக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தவர்களிடம் கார் டெலிவரி கட்டணம், வரி என்ற பெயர்களில் அடிக்கடி அந்நிறுவன ஊழியர்கள் பணம் பறித்துள்ளனர். ஆனால் கடைசி வரை காரையோ, மோட்டார் சைக்கிளையோ முதலீட்டாளர்களின் கண்ணில் கூட காட்டவில்லை. இதுபோல் குறைந்த விலைக்கு தங்கம், வெள்ளி, மோட்டார் சைக்கிள் ஆகியவையும் யாருக்கும் வழங்காமல் போக்குக் காட்டி வந்துள்ளனர்.

 

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் நிறுவனத்தை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

 

இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள், இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். முதல்கட்ட விசாரணையில்,  இந்நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிக் கொண்டு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான நாகராஜன், அவருடைய மகன் வெங்கடேசன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

நாகராஜன், வெங்கடேசன் ஆகியோர் நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. புதிய புகார்களின் அடிப்படையில், மோசடி நபர்கள் இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.