Skip to main content

காப்பகத்திலிருந்து சுவரேறிக் குதித்துத் தப்பித்த 6 சிறுமிகள்?

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

NN

 

அண்மையில் ஈரோட்டில் 16 வயது சிறுமி வளர்ப்புத் தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது கருமுட்டை தனியார் மருத்துவமனையில் விற்கப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது.

 

இது தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு மருத்துவமனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் சீல் வைக்கப்பட்டது.  இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி ஈரோடு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் காப்பகத்திலிருந்து அந்த சிறுமி உட்பட ஆறு சிறுமிகள் சுவரேறிக் குதித்துத் தப்பித்துச் சென்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஈரோட்டிலிருந்து பவானி செல்கின்ற சாலையில் ஆர்.என்.புதூர் என்ற பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. சுமார் 50 பெண் குழந்தைகள் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு கருமுட்டை விவகாரம் தொடர்பான 16 வயது சிறுமியும் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்தக் குறிப்பிட்ட சிறுமி மட்டுமல்லாது மொத்தம் ஏழு சிறுமிகள் துணி துவைக்க வெளியே செல்ல அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி கிடைக்காததால் சுவர் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றுள்ளனர். உடனடியாக காப்பக அதிகாரிகள் தேடியதில் ஆறு சிறுமிகள் பேருந்து நிறுத்தத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

 

இதுகுறித்து சித்தோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காப்பகத்தில் இருப்பதற்கு தங்களுக்கு விருப்பம் இல்லை எனச் சிறுமிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கருமுட்டை விவகாரம் தொடர்பாகக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி ஏற்கனவே காப்பகத்தில் தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.