சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு லாரி மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையிலிருந்து பெங்களுரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வந்த கண்டெய்னர் லாரியை போலீஸார் மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் 20 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக அம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் நாகராஜிடம் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களுருவுக்கு அரிசி கடத்தப்படுவதை உறுதிசெய்தனர். அதையொட்டி, ஓட்டுநரைக் கைது செய்து, கன்டெய்னர் லாரியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். அதிலிருந்த மூட்டைகளை எடை போட்டபோது, 20 டன் ரேஷன் அரிசி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்த மூட்டைகளைப் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் ஆம்பூர் அடுத்த கில்முருங்கை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் வட்ட செயல்முறை கிடங்கில் ஒப்படைத்தனர்.
தினமும் வேலூர் வழியாக ஆந்திரா, கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இங்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியை, ரேஷன் கடை ஊழியர்களைக் கையில் போட்டுக்கொண்டு 10 கிலோ அரிசியை 50 ரூபாய் அல்லது 100 ரூபாய்க்கு வாங்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவருகின்றனர். அதனை பாலிஷ் போட்டு 25 கிலோ சிப்பமாக்கி அதே அரிசியை தமிழகத்தில் கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.