அண்மையில் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேரும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 18 மற்றும் 20 தேதிகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் அச்சிறுவனை தவிர்த்து மீதமுள்ள 12 பேர் என மொத்தம் சேர்ந்து 55 மீனவர்களை இலங்கை சிறையில் அடைத்தனர்.
கடந்த ஒருமாத காலமாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு வந்துகொண்டிருந்தது. நான்காவது முறையாக இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் 55மீனவர்கள்ஆஜர்படுத்தப்பட்டனர். எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் 8 படகுகளின் உரிமையாளர்கள் வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.ஒருவேளை ஆஜராகாத பட்சத்தில் படகுகள் இலங்கை அரசுடைமை ஆக்கப்படும் எனநீதிபதி உத்தரவிட்டார். இதனால் 55 மீனவர்கள் ஒரு சிறுவன் உட்பட 56 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் விமானம் மூலமாக தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.