
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவண்ணாமலை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் டி.எஸ்.பிக்கள், காவல் உதவி ஆணையர்கள் என மொத்தம் 55 காவல் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு 277 காவல் ஆய்வாளர்களை இடம் மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 55 காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.