
தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் இன்று (23.06.2025) வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ‘9 மாவட்ட ஆட்சியர்கள், 7 மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பல்வேறு துறையின் செயலாளர்கள் உள்ளிட்ட 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு அருண் ராஜ், திருப்பூர் மாவட்டத்திற்கு நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், திருச்சி மாவட்டத்திற்குச் சரவணன், செங்கல்பட்டு மாவட்டத்திற்குச் சினேகா, மதுரை மாவட்டத்திற்கு பிரவீன்குமார், விருதுநகர் மாவட்டத்திற்கு சுகபுத்ரா, ஈரோடு மாவட்டத்திற்குக் கந்தசாமி, நாமக்கல் மாவட்டத்திற்கு துர்கா மூர்த்தி, சிவகங்கை மாவட்டத்திற்குப் பொற்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.