52 year old power pole; The tragedy of the boy's death due to a severed wire

இளையான்குடி அருகே மின் வயர் அறுந்து விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்துள்ளது பெரும்பச்சேரி கிராமம். இங்கு வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவரின் மகன் கார்த்திக் (14) தீபாவளி நாளான நேற்று மாலை 5 மணி அளவில் சக நண்பர்களுடன் சேர்ந்து அங்கன்வாடி மையத்தின் எதிரே உள்ள திடலில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அங்கன்வாடி மையத்தின் அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் வயர் ஒன்று திடீரென அறுந்து சிறுவன் கார்த்திக் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 14 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தான். பலமுறை கம்பத்தை மாற்ற வேண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 1972ஆம் ஆண்டு அந்த கம்பம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 52 வருடமாக அந்த கம்பம் உள்ள நிலையில் அதில் இருக்கும் வயர்கள் மிகவும் தரம் குறைந்துள்ளதால் அதனை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

உதவிப் பொறியாளர் சிவக்குமார் என்பவரிடம் பலமுறை இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் மின்துறை அதிகாரிகள் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அங்கன்வாடி மையம் இருப்பதால் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவி இருந்தது. இந்நிலையில் மின் வயர் அறுந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.